பிரபல மலையாள வில்லன் நடிகர் ரிசபாவா திங்கள்கிழமை உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
மலையாளத்தில் வில்லன் நடிகராகவும், பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் பிரபலமாக அறியப்பட்டவர் ரிசபாவா. 1990-இல் சித்திக்-லால் கூட்டணியில் உருவான ´இன் ஹரிஹர நகர்´ படத்தில் அவரது ஜான் ஹோனாய் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. அவர் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான தொற்றால் சிலநாள்கள் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொச்சியிலுள்ள அவரது சொந்த ஊரான முண்டம்வேலியில் செவ்வாய்க்கிழமை இறுதி மரியாதைகள் நடைபெறவுள்ளன.
ரிசபாவா 1990-இல் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் உருவான டாக்டர் பசுபதி திரைப்படம் மூலம் திரைத் துறையில் அறிமுகமானார். இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ரிசபாவாவுக்கு ஜான் ஹோனாய் கதாபாத்திரம் திருப்புமுனையாக அமைந்தது. இந்தக் கதாபாத்திரமே அவர் பிற்காலங்களில் வில்லனாக நடிப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.
ரிசபாவா 123 திரைப்படங்களில் நடித்துள்ளார். படங்களில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார். பெரும்பாலும் தமிழ் நடிகர் தலைவாசல் விஜய்-க்கு மலையாளத்தில் பின்னணிக் குரல் கொடுத்தவர் ரிசபாவாதான். 2010-இல் கர்மயோகி படத்தில் பின்னணிக் குரல் கொடுத்ததற்கு மாநில அரசின் விருதை வென்றார்.
திரைத் துறையில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியவுடன் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் ரிசபாவா.