மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஆதீஷ். சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், தென்காசியை சேர்ந்த சுபாஷினிக்கும் நேற்று திருமங்கலத்தில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது.
கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சுபாஷினிக்கு இது 2-வது திருமணம் ஆகும். அவர் முதல் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு 9 வயதில் மகன் உள்ளான்.
திருமணத்தின்போது சுபாஷினியின் மகன் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் ஆதீஷ், சுபாஷினியின் கழுத்தில் கட்டினார். விழாவில் ஆதீஷ் மற்றும் சுபாஷினியின் நண்பர்கள், தோழிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பெரியார் உருவபடத்தின் முன்பாக நின்று சுபாஷினியும், ஆதீசும் மாலை மாற்றிக் கொண்டனர்.
மகனின் கையால் தாலியை பெற்று அதை அவருடைய தாய் சுபாஷினியின் கழுத்தில் ஆதீஷ் கட்டிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த தம்பதிக்கு பலர் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.