14 வது ஐபிஎல் சீசனின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்தது.
135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். பிரித்வி ஷா 11 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில், கலீல் அகமது வேகத்தில் வீழ்ந்தார்.
இதன்பிறகு, தவான் ஆட்டத்தைக் கையிலெடுக்க ஷ்ரேயஸ் ஐயர் ஒத்துழைப்பு தந்தார். இந்த இணை சீரான வேகத்தில் ஓட்டம் குவித்து, விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டது. 10 ஓவர்கள் முடிவில் டெல்லி 1 விக்கெட் இழப்புக்கு 69 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில், ரஷித் கான் வீசிய 11 வது ஓவரில் தவான் 42 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தலைவர் ரிஷப் பந்த், ஷ்ரேயஸுக்கு ஒத்துழைப்பு தந்தார். ஷ்ரேயஸ் ஓட்டங்கள் குவித்து விளையாடினார்.
வெற்றிக்குத் தேவையான இலக்கை நெருங்கியவுடன் துரிதமாக இலக்கை அடைய அதிரடி காட்டத் தொடங்கி பவுண்டரிகளாக விளாசினார் பந்த். ஜேசன் ஹோல்டர் வீசிய 18 வது ஓவரில் சிக்ஸர் அடித்த ஷ்ரேயஸ் வெற்றியை உறுதி செய்தார்.
17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்கள் எடுத்த டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயஸ் ஐயர் 41 பந்துகளில் 47 ஓட்டங்களும், ரிஷப் பந்த் 21 பந்துகளில் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம், 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.