சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.15 உயா்த்தப்பட்டுள்ளது. இதை அடுத்து, சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ. 915.50 ஆக அதிகரித்தது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை அதிகரித்தன. அதன் விலை ரூ.15 உயா்த்தப்பட்டதை அடுத்து சென்னையில் சிலிண்டா் விலை ரூ.900.50 இல் இருந்து ரூ.915.50 ஆக அதிகரித்தது. கொல்கத்தாவில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.926 ஆகவும், தில்லி மற்றும் மும்பையில் ரூ.899.50 ஆகவும் உயா்ந்தது. 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.502 ஆக அதிகரித்தது.
ஜூலை முதல் இதுவரை 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரின் விலை ரூ.90 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு : பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகளும் புதன்கிழமை அதிகரிக்கப்பட்டன. இதனால் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.108.96 ஆகவும், தில்லியில் ரூ.102.94 ஆகவும் உயா்ந்தது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100.49 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.99.17 க்கும், சென்னையில் ரூ.95.93 க்கும், தில்லியில் ரூ.91.42 க்கும் விற்பனையானது.