ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்டெல்லா கல்லூரியில் பானுபிரித்தா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி நிர்வாகத்தின் டார்ச்சர் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த மாணவியின் பெற்றோருக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியும் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான நடிகை ரோஜா ஆறுதல் கூறினார். அப்போது ரோஜா கூறியதாவது:–
சந்திரபாபுநாயுடு ஆட்சியில் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்து உள்ளது. பெண்கள் மீது அதிக வன்கொடுமை நடக்கும் மாநிலங்களில் ஆந்திரா 2–வது இடத்தில் உள்ளது.
பெண்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிட்டால் ஒரு போன் செய்தால் போதும் உடனே அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று சந்திரபாபுநாயுடு தனது தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது.
மந்திரி நாராயணாவின் கல்வி நிறுவனத்தில் இதுவரை 11 மாணவிகள் தற்கொலை செய்து உள்ளனர். ஆனால் அந்த நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. விசாரணை கூட நடத்தப்பட்டது இல்லை. தனக்கு வேண்டப்பட்டவர் என்பதால் மவுனமாக இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு மகள் இல்லை அதனால் தான் பெண்கள் படும் வேதனை அவருக்கு தெரிவதில்லை.
இல்லாவிட்டால் மாநிலத்தில் சிறப்பு ஒதுக்கீடு பிரச்சினையில், ‘‘மருமகள் ஆண் குழந்தை பெற்று தருகிறேன் என்றால் மாமியார் வேண்டாம் என்றா கூறுவார்கள் என விஷம சிரிப்போடு கூறுவாரா? பெண் குழந்தை மகாலட்சுமி. ஆண் குழந்தை மட்டும் இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது.
மாணவிகள் தற்கொலை செய்வது குறித்து உச்சநீதி மன்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.