குஜராத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 100 புதிய முகங்களை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளது.
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர். பாட்டீல் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது : “எந்தவொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வேட்பாளரை இறுதி செய்வதற்கு முன்பு பாஜக மற்றும் இதர சுயாதீன ஏஜென்சிகள் மூலம் 5-6 கருத்துக் கணிப்புகள் நடத்தப்படும். வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பு கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி எம்எல்ஏ-வின் செயல்பாடுகளும் கருத்தில் கொள்ளப்படும். மேலும் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் வேட்பாளர் பிரபலமாகவும் இருக்க வேண்டும். யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதை யாராலும் நிர்பந்திக்கவோ கட்டளையிடவோ முடியாது.
போட்டியிட விருப்பமுள்ளவர் எவராக இருந்தாலும், அதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னரே, அவரை வேட்பாளராக கட்சி அறிவிக்கும். ஒருவரின் கடுமையான உழைப்பு இங்கு கருத்தில் கொள்ளப்படும்” என்றார் சி. ஆர். பாட்டீல்.