எந்த வேலைக்கும் செல்லாத கதிர், அவருடைய மனைவி ரேஷ்மிமேனன் சம்பாதிக்கும் பணத்தில் காலத்தை ஓட்டுகிறார். நண்பர்களுடன் சேர்ந்து சூதாடி வரும் இவர், ஒருநாள் போலீசில் மாட்டிக் கொள்கிறார். போலீஸ் இன்பார்மரான சார்லி, இவரை தனது சிபாரிசின் பேரில் மீட்டு வருகிறார்.
சார்லிக்கு போலீஸ் வட்டாரத்தில் இருக்கும் செல்வாக்கை கண்டு வியக்கும் கதிர், தனக்கும் அதுபோல் வேலை வேண்டும் என்று சார்லியிடம் கூறுகிறார். சார்லியும் தனது சிபாரிசின் பேரில் போலீசில் தகவல் சொல்லும் எடுபிடி வேலைக்கு சேர்த்து விடுகிறார். கதிர் கூறும் தகவல்களால் போலீஸ் அதிகாரிகள் நிறைய சம்பாதிக்கிறார்கள்.
இந்நிலையில், ஒருநாள் இவர்கள் லிமிட்டுக்குள் இல்லாத ஒரு மது பாரில் நடக்கும் சூதாட்டம் குறித்து கதிர் துப்பு கொடுக்க, போலீசார் அங்கு சென்று ரெய்டு நடத்தி லட்சக்கணக்கில் பணத்தை அள்ளிச் செல்கிறார்கள். இதனால், ஆத்திரம் அடைந்த சூதாட்ட கிளப்பை சேர்ந்தவர்கள் சார்லிதான் இதற்கு காரணம் என்று எண்ணி அவரை கதிர் முன்னால் வெட்டிக் கொன்று விடுகின்றனர்.
இதனால் கதிருக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. மறுபக்கம், கதிரை கொல்லவும் சூதாட்ட கிளப்பை சேர்ந்தவர்கள் திட்டம் போட்டு வருகிறார்கள். கதிர் உதவி செய்த போலீசாரே இவருக்கு எதிராக திரும்புகிறார்கள். இறுதியில், கதிர் நிலைமை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
வேலையில்லாத ஒரு சாதாரண இளைஞனாக கதிர் அப்படியே பிரதிபலிக்கிறார். போலீசுக்கு துப்பு கொடுத்து தன்னை அடித்தவருக்கு சொந்தமான பாரில் ரெய்டு நடப்பதை கண்டு பெருமைப்படும் காட்சியிலும், பின்னர் அதே போலீசார் தனக்கு எதிராக மாறும்போது வேதனைப்படும் காட்சிகளிலும் ரொம்பவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். ஆனால், ஒரு சில காட்சிகளில் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
ரேஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு குறைவுதான் என்றாலும், இவர் வரும் காட்சிகளெல்லாம் நிறைவாக இருக்கிறது. சார்லி மிகவும் எளிமையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கிறார். கதிர் பிழைப்பதற்காக இவர் செய்யும் தியாகம் உருக வைக்கிறது. அனுபவ நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார்.
மேலும், படத்தில் நடித்திருக்கும் தென்னவன், மகேந்திரன், ரவி வெங்கட் ராம், யோகி பாபு ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். யாரும் எப்படியும் போகட்டும், நாம் உண்டு நம் வேலை உண்டு என்று நாம் ஒதுங்கி வாழ்வதே நல்லது என்று இந்த படத்தின் மூலம் பாடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அனு சரண். போலீஸ் அதிகாரிகள் சிலர் எப்படி இருக்கிறார்கள் என்று இப்படத்தில் ‘பளிச்’ என்று காட்டிய இவரது துணிச்சலை பாராட்டலாம்.
கே-யின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையும் பரவாயில்லை. அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு மெச்சும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘கிருமி’ எச்சரிக்கை.