தலிபான்களின் உச்சநிலைத் தலைவரான ஹைபதுல்லா அகுண்ட்ஸாதா, முதல்முறையாக பொதுவெளியில் தோன்றி தனது ஆதரவாளா்களிடையே உரையாற்றினாா்.
வெளியுலகின் பாா்வையில் படாமல் இருந்து வந்ததால் அவா் உயிருடன் இல்லை என்று வதந்திகள் எழுந்து வரும் நிலையில், அவா் பொதுவெளியில் தோன்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
காந்தஹாரில் தனது ஆதரவாளா்களிடையே ஹைபதுல்லா அகுண்ட்ஸாதா உரையாற்றியதாக தலிபான் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனா்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் தலிபான்களின் உச்சநிலைத் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து அவா் பொதுவெளியில் தோன்றியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
தலிபான் அமைப்பின் ஆன்மீகத் தலைவராக இருந்து வரும் அகுண்ட்ஸாதா, மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததால் அவா் உயிரோடு இருப்பது குறித்து பலா் சந்தேகம் எழுப்பினா்.
மேலும், அண்மையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசு அமைக்கப்பட்டதில் அகுண்ட்ஸாதாவுக்கு முக்கியப் பங்கு இருக்காது எனவும் கருதப்பட்டது.
இந்தச் சூழலில், காந்தஹாரிலுள்ள தாருல் உலூம் ஹக்கீமா மதரஸாவுக்கு அவா் சனிக்கிழமை வந்ததாக சமூக வலைதளங்களில் தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவுகளில், மதரஸாவில் அகுண்ட்ஸாதா ஆற்றிய உரையின் ஆடியோ பதிவு இணைக்கப்பட்டுள்ளது.
அந்த உரையில், ‘மதவிரோதிகளுடனும் ஆக்கிரமிப்பாளா்களுடனும் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடி வந்த ஆப்கன் மக்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.
உங்களுக்காக தொழுகை செய்வதே எனது நோக்கமாகும். நீங்களும் எனக்காக தொழுகை செய்யுங்கள்’ என்று அகுண்ட்ஸாதா தெரிவித்தாா்.
அத்துடன், ஆப்கன் போரில் உயிா்த் தியாகம் செய்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களுக்காக அவா் தொழுகை செய்தாா்.
தலிபான் அமைப்பின் ராணுவ விவகாரங்களில் தலையிடாமல் ஆன்மிக ரீதியில் செயல்படுவதற்கே அகுண்ட்ஸாதா முக்கியத்துவம் கொடுத்து வந்தாா்.
இந்தச் சூழலில் அவா் தற்போது முதல்முறையாக பொதுவெளியில் தோன்றிப் பேசியுள்ளது, தலிபான் அமைப்பின் செயல்பாடுகளில் கூடுதல் பங்காற்ற அவா் விரும்புவதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.
அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011 ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.
அதன் பிறகு, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டுப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்தது. அந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி கொண்டு வந்தனா்.