தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருவாடானை சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
திருவாடானை பகுதியில் விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. உப தொழிலாக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பு உள்ளது. இங்கு வாரம்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை சந்தை, அதிகாலை 3 மணியில் இருந்து நடைபெற்றது. இந்த சந்தைக்கு திருவாடானை மட்டுமல்லாது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம்.
இன்னும் மூன்று தினங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சந்தை நடைபெற்றது. இதில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. இந்த ஆண்டு தொடா் மழை காரணமாக ஆடுகள் விலையும் சற்று அதிகமாக இருந்தது.