இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ் பட்லரின் சதத்தால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியை வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
வனிந்து ஹசரங்கா சுழலில் மிரட்ட பவர் பிளேவில் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தினார். டேவிட் மலானை துஷ்மந்தா சமீரா போல்டாக்கினார். இதனால், அந்த அணி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதன்பிறகு, ஜாஸ் பட்லர் மற்றும் கேப்டன் இயான் மார்கன் பாட்னர்ஷிப் அமைத்தனர். ஃபார்மில் இல்லாத மார்கன் நிதானம் காட்டினார். 10 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
13 வது ஓவரிலிருந்து பட்லர் அதிரடிக்கு மாறினார். 45 வது பந்தில் அவர் அரைசதத்தை எட்டினார்.
பின்னர் மார்கனும் அதிரடிக்கு மாறினார். இதனால், அணியின் ரன் ரேட் ஓவருக்கு படிப்படியாக உயர்ந்து 7 ஐ தாண்டத் தொடங்கியது.
ஹசரங்கா வீசிய 19 வது ஓவரில் மார்கன் சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 40 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி ஓவரின் போது பட்லர் 87 ஓட்டங்கள் எடுத்திருந்தார். கடைசி பந்தின்போது சதம் அடிக்க பட்லருக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டன. கடைசி பந்தில் சிக்ஸருக்குப் பறக்கவிட 67 வது பந்தில் சதத்தை எட்டினார். அவர் தலா 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் விளாசினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.