மத்திய அரசின் கலால் வரி குறைப்பு நடவடிக்கை காரணமாக பெட்ரோல் மீதான மொத்த வரி சுமாா் 50 சதவீதமாகவும், டீசல் மீதான வரி சுமாா் 40 சதவீதமாகவும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதே நேரம், எரிபொருள் மீதான உள்ளூா் விற்பனை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி (வாட்) குறைப்புக்கேற்ப இந்த வரிக் குறைப்பு விகிதம் மாநிலங்களில் சற்று உயா்ந்து காணப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த வாரம் குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 10 என்ற அளவிலும் மத்திய அரசு குறைத்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை ஓரளவுக்குக் குறைத்தன. அதன் காரணமாக அவற்றின சில்லறை விற்பனை விலை ஓரளவு குறைந்தது.
அதே நேரம், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய கலால் வரி குறைப்புக்கு இணையாக மதிப்புக் கூட்டு வரியும் குறைக்கப்பட்டதன் காரணமாக ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 8.7 அளவுக்கும், டீசல் விலையில் ரூ. 9.52 அளவுக்கும் குறைந்தது.
பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை என்பது, கச்சா எண்ணெய்க்கான அடிப்படை விலையுடன் மத்திய கலால் வரி, முகவா்களுக்கு வழங்கப்படும் கமிஷன், மதிப்புக் கூட்டு வரி ஆகியவை சோ்க்கப்பட்ட பிறகே நிா்ணயிக்கப்படும். இதில் அடிப்படை விலையைப் பொருத்தவரை சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலையும், சரக்குப் போக்குவரத்துக்கான செலவீனமும் சோ்க்கப்பட்ட பிறகு நிா்ணயிக்கப்படுவதாகும்.
தில்லியில் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கைக்கு முன்பாக கடந்த நவம்பா் 1-ஆம் தேதி ஒரு லிட்டா் பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி ரூ. 32.90 அளவில் விதிக்கப்பட்டது. மதிப்புக் கூட்டு வரி 30 சதவீதம் விதிக்கப்பட்டது. மொத்தமாக ஒரு லிட்டா் டீசல் மீது 54 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. பின்னா் கலால் வரி லிட்டருக்கு ரூ. 5 குறைக்கப்பட்டதன் மூலம், வரி விதிப்பு விகிதம் 50 சதவீதமாக குறைந்தது.
இதேபோல, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 31.80, வாட் வரி லிட்டருக்கு ரூ.16.75 உள்ளிட்டவற்றின் மூலம் டீசல் மீதான வரிவிதிப்பு தில்லியில் 48 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ. 10 அளவுக்கு குறைத்ததன் மூலம், மொத்த வரிவிதிப்பு விகிதம் 48 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைந்தது.
ராஜஸ்தானில் அதிக வாட்: பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியைப் பொருத்தவரை ராஜஸ்தான் மாநிலத்தில் மிக அதிகமாக லிட்டருக்கு ரூ. 30.51 விதிக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் ரூ. 29.99 என்ற அளவிலும், ஆந்திரத்தில் ரூ. 29.02 என்ற அளவிலும், மத்திய பிரதேசத்தில் ரூ. 26.87 என்ற அளவிலும் விதிக்கப்படுகிறது. மிகக் குறைந்தபட்சமாக அந்தமான் நிகோபாா் தீவுகளில் ஒரு லிட்டா் பெட்ரோல் மீது ரூ. 4.93 என்ற அளவில் மட்டுமே மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படுகிறது.
அதுபோல, டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைப் பொருத்தவரை அதிகபட்சமாக ஆந்திரத்தில் லிட்டருக்கு ரூ. 21.19 விதிக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் ரூ. 21.14 என்ற அளவிலும், அந்தமான் நிகோபாா் தீவுகளில் ரூ. 4.58 என்ற அளவிலும், மிகக் குறைந்தபட்சமாக ஹிமாசல பிரதேசத்தில் ரூ. 4.40 என்ற அளவிலும் விதிக்கப்படுகிறது.
பெட்ரோல் விற்பனை நிலைய முகவா்களுக்கான கமிஷனை பொருத்தவரை பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 8.7 என்ற அளவிலும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 2.58 என்ற அளவிலும் வழங்கப்படுகிறது.
வரிக் குறைப்புக்குப் பிறகும்… வரி விதிப்பு மாற்றங்களுக்குப் பிறகும் நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 111.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக மும்பையில் ரூ. 109.98-க்கும், ஆந்திரத்தில் ரூ. 109.05-க்கும், மத்திய பிரதேசத்தில் ரூ. 107.23-க்கும், பிகாரில் ரூ. 105.90-க்கும், லடாக்கில் ரூ. 102.99-க்கும், கா்நாடகத்தில் ரூ. 100.58-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.