ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடிகர் விஜய் மாறுவேடத்தில் வந்து சாமி தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு சொகுசு காரில் நேற்று ஒருவர் வந்தார்.
முகத்தை துணியால் மறைத்தபடி தலையில் தொப்பி அணிந்தவர் உள்பட 3 பேர் வந்து கோவில் வாசல் முன் வந்து இறங்கினார். அவர்களை கோவில் ஊழியர் கர்ணன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். அப்போது கோவிலின் சிறப்பு குறித்த விவரங்கள் அனைத்தையும் தொப்பி அணிந்து வந்த பிரமுகர் கேட்டறிந்தார்.
அப்போது தான் கோவில் ஊழியருக்கு, மாறுவேடத்தில் வந்து இருந்தவர் குறித்து சந்தேகம் ஏற்பட்டது. உடனே ‘நீங்கள் நடிகர் விஜய் தானே’ என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவர், நான் நடிகர் விஜய் தான். சாமி தரிசனம் செய்வதற்காக இங்கு வந்துள்ளேன். யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்’ என்று கூறி உள்ளார்.
நெய் விளக்கு ஏற்றி தரிசனம் பின்னர் நடிகர் விஜய் நெய்விளக்கு வாங்கி ஆண்டாள் சன்னதியில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வாசலுக்கு வந்து காரில் ஏறி புறப்பட்டார். அப்போது தொப்பி, முகத்தில் மறைத்து இருந்த துணியை அகற்றி விட்டு கோவில் ஊழியருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்த தகவல் பரவி ரசிகர்கள் அங்கு ஏராளமான அளவில் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.