சென்னைக்கு இருந்து கனமழை எச்சரிக்கை என்பது முடிவுக்கு வந்துள்ளது என்றும், இனி எப்போதாவது ஆங்காங்கு மழை பெய்யக்கூடும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்கும் வரை காற்று வேகமாக வீசக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று வியாழக்கிழமை (நவ.11) மிக பலத்த மழை பெய்யக் கூடும் என கூறப்பட்ட நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் சென்னைக்கு இருந்த மோசமான கனமழை ஆபத்து விலகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று வியாழக்கிழமை(நவ.11) மாலை வடசென்னைக்கும்- ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் வரை காற்று வீசும். அதன் பின்னர் எப்போதாவது மழை பெய்யும்.
மழையளவு : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சில இடங்களில் 200 மி.மீட்டருக்கு மேல் பதிவாகியுள்ளது. இன்று மழை விட்டு விட்டு பெய்யும். காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசும் என தெரிவித்துள்ளார்.
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தற்போது 7893 கன அடியாக அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றம் 6,226 கன அடியாகவும், அணை 77 சதவிகிதம் நிரம்பியுள்ளது.
புழல் ஏரிக்கு நீர்வரத்து தற்போது 6,273 கன அடியாக அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றம் 3,218 கன அடியாகவும், அணை 88 சதவிகிதம் நிரம்பியுள்ளது.
சோழவரம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து 3625 கன அடியாக அதிகரித்துள்ளதால், நீர் வெளியேற்றம் 2,015 கனஅடியாகவும், அணை 84 சதவிகிதம் நிரம்பியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து 5055 கன அடியாக அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றம் 2151 கன அடியாகவும், அணை 76 சதவிகிதம் நிரம்பியுள்ளது.