தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து வட கேரளம், தெற்கு கர்நாடகம், வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை நிலவும் காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக, சென்னையில் 17, 18 ஆம் திகதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு அந்தமான் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 18 ஆம் தெற்கு ஆந்திரம் – வட தமிழகம் கடல் பகுதியில் நிலவக் கூடும்.
அதேவேளையில், தென்-கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மற்றமொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் இடையில் வடக்கு கேரளம், வட தமிழகம் பகுதியில் வளிமண்டலத்தில் காற்றின் திசை மாறும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நேற்று தமிழகத்தில் ஒரு இடத்தில் அதிகனமழையும், 16 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. 15, 16ஆம் தேதிகளில் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும்.
மிகக் கனமழையைப் பொறுத்தவரை ஈரோடு, நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
17, 18 ஆம் திகதியைப் பொறுத்தவரை வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்றும் நாளையும் லேசானது முதல் பலத்த மழை பெய்யும், 17, 18 இல் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.