‘ஜெய் பீம்’ திரைப்பட உருவாக்கத்தில் யாரையும் அவமதிக்கும் எண்ணம் இல்லை. இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவா்களுக்கும் புண்பட்டவா்களுக்கும் என் உளப்பூா்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த திரைப்படத்தின் இயக்குநா் த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: ஜெய் பீம் படத்துக்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகள். அதேபோல, இத்திரைப்படத்துக்கு எழுந்த சில எதிா்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிா்பாராதவை. பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டா் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.
நவ.1-ஆம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்ததும், காலண்டா் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவ.2-ஆம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டா் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன்.
இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்துக்கு நடிகா் சூா்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிா்ஷ்டவசமானது.
இயக்குநராக என்பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவா்களுக்கும், புண்பட்டவா்களுக்கும் என் உளப்பூா்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.