நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சூர்யகுமார் யாதவ் புதிய வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தொடக்க வீரர் கே.எல். ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நவம்பர் 25 முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெறுகிறது.
இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல். ராகுல் முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதை அடுத்து சூர்யகுமார் யாதவ், இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் காரணமாக டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கான்பூர் டெஸ்டில் அறிமுகமாவதற்கு ஷ்ரேயஸ் ஐயருடன் போட்டியிட வேண்டிய நிலைமையில் உள்ளார் சூர்யகுமார் யாதவ். இதற்கு முன்பு இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலும் சூர்யகுமார் யாதவ், இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்தில் ஷுப்மன் கில், அவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டதால் சூர்யகுமார் யாதவும் பிருத்வி ஷாவும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்கள்.
2020 ஐபிஎல் போட்டியில் பிரமாதமாக விளையாடியதால் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டார் சூர்யகுமார் யாதவ். இந்திய டி20 உலகக் கிண்ண அணியிலும் இடம்பிடித்தார். 30 வயதில் இந்திய அணிக்கு அறிமுகமானார்.
டெஸ்ட் அணிக்கு அவரைத் தேர்வு செய்தது ஏன்? 2019-20 ரஞ்சி கிண்ண போட்டியில் மும்பை அணிக்காக 10 இன்னிங்ஸில் இரு சதங்கள், இரு அரை சதங்களுடன் 508 ஓட்டங்கள் எடுத்தார் சூர்யகுமார் யாதவ். சராசரி – 56. 44.
இந்திய அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வருவதாலும் கடைசியாக விளையாடிய ரஞ்சி கிண்ண போட்டியில் திறமையை நிரூபித்ததாலும் இந்திய டெஸ்ட் அணிக்கு சூர்யகுமார் யாதவ் தேர்வாகியுள்ளார்.