‘பாகுபலி’ படத்தின் மாபெரும் வெற்றி மூலம் இந்திய சினிமாவை உலகமே திரும்பிபார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி.
சுமார் ரூ.200 கோடி செலவில் தயாரான ‘பாகுபலி’ உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்து ‘பாகுபலி–2’ பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இது முதல் படத்தை விட அதிக அளவு பேசப்பட வேண்டும் என்பதில் இதை இயக்கும் ராஜமவுலி உறுதியாக இருக்கிறார்.
அதற்கு ஏற்ப படக்குழுவினர் திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள். நடிகர், நடிகைகளும் இதற்கு ஏற்ப பயன்படுத்தப்பட இருக்கிறார்கள். மிக பிரமாண்டமாக பாகுபலி–2 உருவாகிறது.
‘பாகுபலி–2’ படத்துக்கு பிறகு மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோரை வைத்து 2 பெரிய பட்ஜெட் படங்களை இயக்க ராஜமவுலி திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்பிறகு தனது கனவு படமான மகாபாரதத்தை ராஜமவுலி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ரூ.950 கோடி செலவில் தயாராக இருப்பதாக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். இப்போது இந்த படம் ரூ.1000 கோடி செலவில் உருவாகப் போவதாகவும், இதற்கு ‘கருடா’ என்று பெயர் வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராஜமவுலி தான் இயக்கும் மகாபாரதம் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். கிருஷ்ணா வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இப்போது இவருடன் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லாலும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.