ஒமைக்ரான் கரோனா தொற்று உலக நாடுகளிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் பரவல் திறன் குறித்து பல்வேறு தொடக்க கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகிவருகிறது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகள் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில், டெல்டா அல்லது பீட்டா வகை கரோனாவுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் பரவலில் மூன்று மடங்கு திறனைக் கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா சுகாதார அமைப்பு சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முந்தைய கரோனா தொற்று காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை முறியடித்துத் தொற்றும் திறனை ஒமைக்ரான் பெற்றுள்ளது என்பதற்கான தொற்றுநோயியல் சான்றுகள் இந்த ஆய்வின் மூலம் முதல்முறையாக கிடைத்துள்ளன.
இந்த ஆய்வு முடிவுகளை, மற்ற விஞ்ஞானிகள் இன்னும் மதிப்பாய்வு செய்யவில்லை. நவம்பர் 27ஆம் தேதி வரை, கரோனா தொற்றிய 28 லட்சம் பேரில் 35,670 பேருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 90 நாள்களுக்குள் மீண்டும் கரோனா தொற்று இருப்பது உறுதியானால், அது மறு தொற்றாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து தென்னாப்பிரிக்க அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் துறையில் தேசிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக உள்ள ஜூலியட் புல்லியம் கூறுகையில், “மூன்று அலைகளிலும் முதன்மையான நோய்த்தொற்றுகள் ஏற்பட்ட நபர்களில் சமீபத்தில் மறு தொற்று ஏற்பட்டுள்ளன, பெரும்பாலானவர்கள் டெல்டா அலையில் முதன்மையான தொற்றுநோயைக் கொண்டிருந்தனர்.
தனிநபர்களின் தடுப்பூசி நிலை பற்றிய தகவல்கள் ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்களிடம் இல்லை. எனவே, ஒமைக்ரான் எந்த அளவிற்கு தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை முறியடித்துப் பரவுகிறது என்பதை மதிப்பிட முடியவில்லை. இதுகுறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். ஒமைக்ரான் நோய்த்தொற்றுடன் தொடர்புடைய நோயின் தீவிரம் குறித்த தரவுகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. முந்தைய நோய்த்தொற்றின் வரலாற்றைக் கொண்ட நபர்களின் தகவல்களும் தேவைப்படுகிறது” என்றார்.
இந்த ஆய்வு உயர் தரத்துடன் மேற்கொள்ளப்பட்டது என சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக உள்ள மைக்கேல் ஹெட் தெரிவித்துள்ளார்.