தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக விளங்கியவர் ஏடித நாகேஸ்வர ராவ். 81 வயதான இவர் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 20-ந் திகதி அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணியளவில் அவர் காலமானார்.
தேசிய விருது பெற்ற ‘சாகர சங்கமம்’, ‘சங்கராபரணம்’, ‘சித்தாரா’ மற்றும் ‘ஸ்வயம்கிருஷி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இவர் தயாரித்து உள்ளார். ‘சாகர சங்கமம்’ (சலங்கை ஒலி), ‘சங்கராபரணம்’ போன்ற படங்கள் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொத்தபேட்டையை சேர்ந்த இவர், தேசிய சினிமா விருது கமிட்டி உறுப்பினர், ஆந்திர மாநில நந்தி விருது கமிட்டி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.
ஏடித நாகேஸ்வர ராவின் மறைவுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இயக்குனர் கே.விஸ்வநாத் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஏடித நாகேஸ்வர ராவின் இறுதிச்சடங்குகள் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளில்ஸ் பகுதியில் இன்று நடக்கிறது. இவருக்கு ராஜா, ஸ்ரீராம் என்ற 2 மகன்கள் உள்ளனர்.