தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந் திகதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1-ந் திகதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி பத்மநாபன் முன்னிலையில் நடந்தது.
இதில் மொத்தம் 71 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததாகவும், அவற்றில் 68 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி அறிவித்தார். அலாவுதீன், பாலகிருஷ்ணராவ் மற்றும் வாசுதேவன் ஆகிய 3 பேரின் வேட்பு மனுக்கள், தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமார் மற்றும் அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாரவி, துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
சரத்குமார் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் ராம்கி, டி.பி.கஜேந்திரன், அசோக், நளினி, கே.என்.காளை, ஜெயமணி, நிரோஷா, எஸ்.என்.பார்வதி, கே.ராஜன், கே.ஆர்.செல்வராஜ், ஜாக்குவார் தங்கம், சிசர் மனோகர், மோகன்ராமன், பசி சத்யா உள்பட 24 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.
இதுபோல் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால், துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தி ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் ராஜேஷ், பிரசன்னா, ஜூனியர் பாலையா, கோவை சரளா, ரமணா, நந்தா, உதயா, சங்கீதா, பூச்சி முருகன், குட்டி பத்மினி, ஸ்ரீமன் உள்பட 24 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன. போட்டியில் இருந்து விலகிக்கொள்ள விரும்புபவர்கள் வருகிற 7-ந் திகதி மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 8-ந் திகதி வெளியிடப்படுகிறது.