ஒரு சிலரின் குரல் வசீகரிக்கும். முகம் பார்க்காமல் பின்னணி குரலுக்காகவே ரசிகர்கள் ஆனவர்கள் பலர் உண்டு. அதேபோல விஜய் டிவியில் பின்னணி குரல் கொடுத்து வரும் கோபி நேற்று சிறந்த வாய்ஸ் ஓவர் விருது பெற்றதன் மூலம் தனது முகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
மகாபாரதம் தொடரின் சகுனியின் குரல்… அந்த வில்லத்தனமாக சிரிப்பை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த குரலுக்குச் சொந்தக்காரர் கோபி என்றால் நம்ப முடிகிறதா? விஜய் டிவியின் புரமோக்களில் கேட்ட குரல்… ரசிகர்களால் ரசிக்கப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரர் நேற்று ரசிகர்கள் முன்பு அறிமுகமானார். இப்படி ஒரு அறிமுகம் கிடைக்க இந்த விருதுவாங்க தனக்கு 13 வருடங்கள் ஆகிவிட்டது என்று சற்றே வருத்தம் கலந்த மகிழ்ச்சியில் தெரிவித்தார் கோபி.
உங்களுக்கு எல்லாம் நீயா நானா கோபி தெரியும் என்னை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார் வாய்ஸ் கோபி. கோபியின் குரலுக்கு ரசிகர்களாக இருக்கும் பலரும் இன்று ஃபேஸ்புக், டுவிட்டரில் வாய்ஸ் கோபிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விருது பெற்றதை குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார் கோபி…