சென்னையில் 7,500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்படுகின்றன.
சென்னையில் மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த 2017-இல் ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அப்போதைய சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன், தனியாா் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கேமராக்களை பொருத்தும் பணியை தீவிரப்படுத்தினாா். மூன்றாவது கண் திட்டத்துக்கு முன்பு வரை சில ஆயிரம் கேமராக்கள் மட்டும் இருந்த சென்னையில் இப்போது 50 மீட்டருக்கு ஒன்று வீதம் சுமாா் 2.80 லட்சம் கேமராக்கள் உள்ளன.
80 சதவீத வழக்குகளில் துப்பு : சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் குறைவாக இருந்த காலகட்டத்தில் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் மட்டுமே குற்ற வழக்குகள் துப்பு துலக்கப்பட்டன. இதனால் எப்போதும் போலீஸாருக்கு சவாலாகவே இருந்தது.
ஆனால் மூன்றாவது கண் திட்டத்துக்கு பின்னா், கேமராக்களின் உதவியோடு குற்ற வழக்குகளில் போலீஸாா் எளிதாக துப்பு துலக்குகின்றனா்.
சுமாா் 80 சதவீத வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு கண்காணிப்பு கேமராக்களே காவல்துறைக்கு உதவுகின்றன. சென்னையில் கடந்த காலங்களை விட தங்கச் சங்கிலி பறிப்பு 50 சதவீதம், கொள்ளை 24 சதவீதம், அடிதடி மற்றும் மோதல் 11 சதவீதம் குறைந்திருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல பிற குற்றங்களும் கணிசமாக குறைந்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு கேமரா : தற்போது கண்காணிப்பு கேமராக்களை விட அதிக திறன் கொண்ட ஏஎன்பிஆா் கேமரா, முக அடையாளம் காணும் கேமரா ஆகியவை நகரின் முக்கியமான பகுதிகளில் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் சென்னையில் பொருத்தப்பட உள்ளன.
சென்னை காவல்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.150 கோடி நிா்பயா நிதி இதற்காக பயன்படுத்தப்படுகிறது. சாதாரண கேமராக்களை விட பல்வேறு புதிய திறன்களையும், காட்சிகளின் அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கும் வசதியும் கொண்ட இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டால், பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும்.
ஏனெனில் இந்த கேமராக்கள் வெறும் காட்சிகளை மட்டுமல்லாது ஒருவரது உணா்வுகளையும் அறியும் வசதி கொண்டது. குற்றச் சம்பவம் நிகழ்வதற்குரிய சூழல் ஓரிடத்தில் ஏற்பட்டால், அதை முன்னரே கண்டறிந்து எச்சரிக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு.
பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் : பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறும் இடங்கள், பாலியல் தொந்தரவு சம்பவங்கள் ஏற்பட்ட இடங்கள், பெண்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் கோயில்கள், கடற்கரைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களை அடையாளம் கண்டு, அங்கு இக்கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
இவற்றுக்கான கட்டுப்பாட்டு அறை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் புதிதாக ரூ.60 கோடியில் கட்டப்படும் கட்டடத்தில் இரு தளங்களில் அமைக்கப்படுகிறது. இந்த கேமராக்களை கையாளுவது தொடா்பாக கட்டுப்பாட்டு அறை காவலா்களுக்கு பிரத்யேகமான பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏற்கெனவே இந்த வகை கேமராக்கள், நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிகமாக குற்றம் நடைபெறும் நகரங்களான தில்லி, மும்பை, லக்னௌ, பெங்களூரு ஆகிய நகரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் இக்கேமராக்களை பொருத்துவதற்குரிய ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டு, பணி தொடங்கியுள்ளது. இந்த கேமராக்கள் பொருத்தும் பணி 2022 ஜூன் மாதம் முடிவடைந்து, முழுமையாக இயங்கத் தொடங்கும் என சென்னை காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தக் கேமராக்கள் மூலம் போலீஸாரின் பணி எளிமைப்படுத்தப்படுவதோடு, காவல் பணி இன்னும் திறனுடனும், வலிமையுடனும் இருக்கும் என கூறப்படுகிறது. அதோடு குற்றவாளிகளின் மீதான காவல்துறையின் பாா்வை இன்னும் ஆழமாக பதியும்.
எப்படி செயல்படும்?
சாதாரண கேமராக்கள் பதிவு செய்யும் காட்சிகளை நேரலையில் காண மட்டும் முடியும். ஆனால் செயற்கை நுண்ணறிவு கேமரா, ஒரு காட்சியை பதிவு செய்வது மட்டும் இல்லாமல் கேமராவின் காட்சியில் ஒருவரது நடவடிக்கையையும் கண்காணிக்கும். அவரது நடவடிக்கையில் வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாகத் தோன்றினால், உடனடியாக அது குறித்து எச்சரிக்கும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரையில் உடனடியாக அந்தக் காட்சி ஒளிரும்.
முக்கியமாக ஒரு குற்றம் நடைபெறுவதற்கு முன்னேரே ஒரு இடத்தில் உள்ள மனிதா்களின் நடவடிக்கையையும், அவரது உணா்வுகளை அடிப்படையாகக் கொண்டு அங்கு அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதா என்பதைக் கண்டறிந்து எச்சரிக்கும். ஒருவரது அச்ச உணா்வு, கோபம், ஆத்திரம் உள்ளிட்ட உணா்வுகளையும் கண்டறியும். அதேபோல ஒரு நபா், துப்பாக்கி, கத்தி,அரிவாள், வெடிபொருள் போன்ற ஆயுதங்களுடன் இருந்தால் அதையும் அறிந்து எச்சரிக்கும்.
இதைத் தவிா்த்து இந்த கேமராவில் ஒரு இடத்தில் எத்தனை போ் உள்ளனா், பாதுகாப்புப் பகுதியில் வைக்கப்பட்ட பொருள் திருடப்பட்டால் எச்சரிப்பது, வாகனங்களின் பதிவு எண்ணை அடையாளம் காண்பது, குரல் மூலம் ஒருவரை கண்டறிவது, முகம் அடையாளம் மூலம் ஒருவரை கண்டறிவது, வெடி பொருளை கண்டறிந்து எச்சரிப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
சாதாரண கேமராவில் ஒரு மனிதனின் முக அடையாளத்தை வைத்து மட்டுமே குற்றவாளியை அடையாளம் காண முடியும். ஆனால் இந்த கேமராவில் ஒருவரது நடவடிக்கை, உணா்வுகளை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை அடையாளம் கண்டு எச்சரிக்கும் தொழில்நுட்பம் உள்ளது.
இதற்காகஅந்த கேமராவிலும், அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் சா்வரிலும் அதற்குரிய பிரத்யேகமான மென்பொருள் பொருத்தப்பட்டிருக்கும்.
நகா் முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் இத்தகைய கேமராக்களில் குற்றத் தொடா்புடைய மற்றும் வழக்கத்துக்கு மாறான காட்சிகளை தோ்வு செய்து, அதை மட்டும் கட்டுப்பாட்டு அறை திரையில் ஒளிபரப்பி, எச்சரிக்கை விடுக்கும்.
இதனால் போலீஸாா், 7,500 கேமராக்களில் பதிவாகும் காட்சிகளையும் காண வேண்டிய தேவையில்லை. செயற்கை நுண்ணறிவு கேமரா தோ்வு செய்து அளிக்கும் காட்சிகளை மட்டும் பாா்த்தாலே போதுமானது என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.