தென்னாப்ரிக்காவில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் தீநுண்மி தற்போது தமிழகத்துக்குள்ளும் பரவிவிட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரோன் பாதித்து, அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் 34 வயது நபர், தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஏற்கனவே, எனக்கு டெல்டா வகை கொரோனா பாதித்திருக்கிறது. தற்போது ஒமிக்ரோன் தொற்று பாதித்து, அது தொடர்பான அனுபவத்தையும் பெற்றுவிட்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையின்போது, எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நான் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளேன். இவ்வளவுக்கும் இடையே, எனக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதித்தது. எப்படியாகினும், தற்போது ஒமிக்ரோன் பாதித்ததைவிடவும், டெல்டா வகை வைரஸ் பாதித்தபோதுதான் மிகவும் அவதிக்குள்ளானேன் என்று அந்த விடியோவில் அவர் கூறியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள ஒமிக்ரோன் தனிப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாயன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், அவர் தனது ஒமிக்ரோன் பாதிப்பு அனுபவம் குறித்து ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, கடந்த ஏப்ரல் மாதத்தில் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்து குணமடைந்தேன். தற்போது, வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவிட்டு திரும்பிய நிலையில், ஒமிக்ரோன் பாதித்தது. முதல் முறை கொரோனா பாதித்தபோது, தொண்டை வலி, இருமல், உடல் சோர்வு கடுமையாக இருந்தது. ஆனால் இந்த முறை, கூடுதலாக எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லாமல் இருந்தது என்கிறார்.
தனக்களிக்கப்பட்ட சிகிச்சை பற்றி கூறுகையில், சிறப்பாக எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. விட்டமின் சி மாத்திரையும், அண்டிபயாடிக் மருந்துகளும் கொடுக்கப்பட்டன். எந்த அறிகுறியும் மோசமாக இல்லை. கடந்த ஒரு வாரமாக, மருத்துவமனையின் சிறப்பு வார்டில் இருந்தபடி, எனது வேலையை செய்து கொண்டிருந்தேன் என்கிறார்.
கடந்த நவம்பர் மாதம் தென்னாப்ரிக்காவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினேன். பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கியதும் சோதனை செய்ததில் கொரோனா இல்லை என்று வந்தது. ஆனால், 3 நாள்களில் தொண்டை வலி, இருமல் ஏற்பட்டது. உடனடியாக மீண்டும் கொரோனா சோதனை செய்ததில், தொற்று உறுதி செய்யப்பட்டது. பிறகு, எனது மாதிரிகள் கொரோனா மரபணு வரிசைமுறை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், அங்கு ஒமிக்ரோன் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்.