தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், பயனாளர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் வரும் நாள்களில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வரும் பிப்ரவரி மாதம் ஒரு முக்கியக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, இது தொடர்பான முடிவுகளை எடுத்து அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் அல்லது இபிஎஸ் திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் பெறும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தொகை ரூ.1000-லிருந்து ரூ.9,000 ஆக உயரும் வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக, ஓய்வூதியதாரர்கள் தரப்பில் பல காலமாக கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், இது பல கட்ட ஆலோசனைக் கடந்து, தற்போது முடிவெடுக்கும் தறுவாயில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு, இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படவிருக்கின்றன. இந்தக் கூட்டத்தில், இரண்டு மிக முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவிருக்கிறது. அதில் ஒன்று புதிய தொழிலாளர்கள் கொள்கை மற்றும் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது ஆகியவையாகும்.
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த பரிந்துரையில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், அதேவேளையில், ஓய்வூதியதாரர்களோ, தங்களது மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.9,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அப்போதுதான், தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் -1995ன் கீழ் பயனாளர்கள் உண்மையிலேயே பயன்பெறும் வாய்ப்பு ஏற்படும்.
இது தொடர்பாக முடிவெடுக்க அளிக்கப்பட்டிருக்கும் யோசனைகளில், ஒரு தொழிலாளி, ஓய்வு பெறுவதற்கு முன்பு பெற்ற ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு, அவரது ஓய்வூதியத்தை நிர்ணயிப்பது என்பதும் அடக்கம். பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மத்திய தொழிலாளர் அமைச்சகக் கூட்டத்தில் இந்த பரிந்துரை குறித்தும் ஆலோசிக்கப்படவிருக்கிறது.
புதிய தொழிலாளர்கள் கொள்கை குறித்த மசோதாக்கள் நடைமுறைக்கு வந்தால், வாரத்தில் பணி நாள்கள் குறைந்து, கைக்கு வரும் ஊதியம் குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மறுபக்கம், குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.