தில்லியில், கொரோனா பரிசோதனை செய்வோரில் தொற்று உறுதியாகும் விகிதம் கடந்த 24 மணி நேரத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்திருக்கும் நிலையில், அங்கு தில்லி பேரிடர் மேலாண்மை அணையம் புதிய கட்டுப்பாடுகளை பிறப்பிக்கும் என்று கருதப்படுகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கவும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், எந்த வகையான கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தில்லியில், மொத்தம் நான்கு வகையான எச்சரிக்கைகள் உள்ளன. மஞ்சள், பொன்னிறம், ஆரஞ்சு, சிவப்பு உள்ளிட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்படும். தற்போது, தில்லி மஞ்சள் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மஞ்சள் எச்சரிக்கையில், தில்லியில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுப் போக்குவரத்துகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களிலும் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் விதிக்கலாம் என்று கூறப்படுகிறது.