சஹாரா துணைக்கண்டத்துக்கு உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பேஸ்புக் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அதிவேக இணையவசதியை வழங்கும் நோக்கில் செயற்கைகோள் ஒன்றை நிலைநிறுத்த பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகின் சரிபாதி மக்கள் இணையங்களோடு தொடர்பில்லாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் கென்யாவில் மட்டும் சுமார் 2 கோடி மக்கள் கைபேசி வாயிலாக பேஸ்புக் மூலம் பிறருடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். இதையடுத்து, ஜோகனஸ்பர்க் நகரில் கடந்த ஜுன் மாதம் பேஸ்புக் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.
ஆனால், சஹார துணைகண்டத்தின் பாலைவனப் பகுதிகள் உள்ளிட்ட பிற இடங்களில் சரியான இணையத்தொடர்பு வசதிகள் இல்லாததால், இங்குள்ள மக்களையும் பேஸ்புக்கில் இணைக்கும் முயற்சியாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான யூடெல்சாட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் ‘அமோஸ்-6’ என்ற செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் ‘இண்டர்நெட் டாட் ஆர்க்’ திட்டத்தின் ஒருபகுதியாக இணய வசதி இல்லாத பகுதிகள், இணையத்தின் வேகம் மிக குறைவாக உள்ள பகுதிகளில் ‘அமோஸ்-6’ செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
இதில் முதல்கட்டமாக வரும் 2016-ம் ஆண்டு சஹாரா துணைக்கண்டத்துக்கு உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் அதிவேக இணையவசதியை வழங்கும் நோக்கில் செய்ற்கைகோள் ‘அமோஸ்-6’ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், இந்த இணையச்சேவையின் மூலம் வேலைவாய்ப்பு, வேளாண்மை தொடர்பான தகவல்கள் சார்ந்த தளங்கள், மருத்துவம், கல்வி மற்றும் பேஸ்புக் ஆகிய இணையச் சேவைகள் இங்குள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.