கன்னட சினிமாவின் ஜாம்பவான் நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் குமார். நடிகரான இவர் கன்னட திரையுலகில் நம்பர்–1 நடிகராக உள்ளார். 50 வயதை கடந்த சிவராஜ் குமாருக்கு இன்று காலை, திடீரென வலது நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆஞ்சியோகிராம் மூலம் அவரை பரிசோதித்த டாக்டர்கள், லேசான மாரடைப்பால் சிவராஜ்குமார் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும், மருந்துகள் மூலம் இதை சரிசெய்ய முடியும் என்றும் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கும் இருதய பிரச்சினை இருந்தது. எனவே அவரது மகனுக்கும், மரபு மூலம் அந்த பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று மல்யா மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். இன்னும் 2 நாட்களுக்கு சிவராஜ்குமார் மருத்துவமனையில் ஓய்வெடுக்க உள்ளார். சிவராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்ததும், அவரது ரசிகர்கள் மருத்துவமனை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.