வரவிருக்கும் படங்களில் காரசாரமாக விவாதிக்க படும் படம் ‘மசாலா படம்’. சினிமாவைப் பற்றிப் பல படங்கள் வந்து இருக்கலாம், ஆனால் சினிமாவை விமர்சிப்பவர்கள் பற்றியும், சினிமா சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றியக் கதையாக ‘மசாலா படம்’ உருவாகியிருக்கிறது. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் இயக்கியிருக்கிறார். ஆல் இன் பிட்சர்ஸ் விஜய் ராகவேந்தர் தயாரித்திருக்கிறார்.
பாபி சிம்ஹா மற்றும் மிர்ச்சி சிவா இரண்டு வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் இந்தப் படத்தில் கௌரவ் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளார்.
படம் பற்றி கௌரவ் கூறும்போது, ‘பொறியாளர் கல்வி தகுதி பெற்ற எனக்கு நடிப்பின் மேல் தீவிரக் காதல் உண்டு. அதற்காகவே பிரத்தியேகமாக உள்ள பயிற்சி அரங்குகளில் பயின்றேன். எல்லா மொழி படங்களையும் பார்த்து நடிப்பை பயின்றேன். இந்த நேரத்தில் தான் இயக்குனர் லக்ஷ்மணை நேரில் சந்தித்தேன். அவர் மசாலா படத்துக்காக ப்ளே பாய் கதாப்பாத்திரம் ஒன்று உள்ளதாகவும் அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதுவதாகவும் கூறி என்னை தேர்ந்து எடுத்தார். பல்வேறு படங்களை பல மொழிகளில் பார்த்து இருந்த எனக்கு இந்தக் கதைக்களம் மிக வித்தியாசமாக தெரிந்தது. மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, நான் உட்பட மூன்று நாயகர்கள் இருந்தாலும் நாங்கள் கிளைமாக்ஸ் காட்சியில் தான் ஒரே பிரேமில் வருவோம். அந்த அளவுக்கு வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் லக்ஷ்மன்.
இப்படம் இம்மாதம் 9-ம் திகதி திரைக்கு வெளிவர உள்ளது. எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர் லக்ஷ்மன், தயாரிப்பாளர் விஜய் ராகவேந்தர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி’ என்றார்.