பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு நிலவிவரும் சூழலில் 9 குழந்தைகள் உட்பட 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் புகழ்பெற்ற மலைஸ்தலங்களில் ஒன்றாக முர்ரே பகுதி திகழ்கிறது. தற்போது அங்கு கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. ஆட்களே உறைந்துபோகும் அளவுக்கு உறைபனி நிலவுகிறது. இதனால் அங்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
15 ஆண்டுகளில் இல்லாத அளவு சுற்றுலா பயணிகள் குவிந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் முர்ரி நோக்கி வரும் பாதைகளில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது உறைபனி நிலவியதால் சுற்றுலா பயணிகளில் பலர் தங்கள் கார்களிலேயே உறைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை 9 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்ததுள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 23 ஆயிரம் வாகனங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முர்ரியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டன. பனிப்பொழிவில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சாலைகளை மறைத்து ஆக்கிரமித்திருக்கும் பனிக்கட்டிகளை அப்புறப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பனிப்பொழிவினால் பாதிக்கப்பட்ட முர்ரே பேரிடர் தாக்கிய பகுதியாக பஞ்சாப் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. முர்ரே நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.