அனைவருக்குமே வெளிப்படையாக பேசும் சுபாவம் இருக்காது. ஒருசிலர் மட்டுமே எந்த விஷயமாக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அவர் யாராக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவார்கள். இது ஒரு தனித்தன்மையும் கூட. இப்படி பேசுபவர்களை மற்றவர்கள் வாய்த்துடுக்கு, திமிர் என்றெல்லாம் குறிப்பிடுவது உண்டு.
ஆனால், தைரியம், துணிச்சல் மிகவும் தேவை. மற்றும் வெளிப்படையாக பேசும் நபர்கள் அவர்கள் மனதில் எதையும் மறைத்து வைத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, இவர்களை முழுமையாக நம்ப முடியும். இவர்களுக்கு உதவும் குணம் அதிகம் இருக்கும். நீங்களே கூட உங்கள் நட்பு வட்டாரம் மற்றும் உறவினர்கள் மத்தியில் பார்த்திருக்கலாம். வெளிப்படையாக பேசும் நபர்கள் தான் மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.
பெரும்பாலும் ஒரு நட்பு வட்டாரம் என்றிருந்தால், அதில் வெளிப்படையாக பேசும் நபர் தான் அதன் தலயாகவோ அல்லது முக்கிய நபராகவோ இருப்பார்கள். இதில் நீங்கள் வெளிப்படையாக பேசும் நபராக இருந்தால் எதற்கெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்று பார்க்கலாம்….
மகிழ்ச்சியின் ஊற்று
எந்த இடத்திற்கு சென்றாலும், தங்களை சுற்றி இருக்கும் வட்டத்தினரை மகிழ்ச்சி குறையாமல் பார்த்துக் கொள்பவர்கள் இவர்களாக தான் இருப்பார்கள். தங்களது சோகத்தை மறைத்து, அனைவரையும் மகிழ்விக்கும் இவர்களது செயல்கள் மிகவும் வியப்பூட்டும் வகையிலானது.
அன்பான நண்பர்கள்
யாருக்கு என்ன நேர்ந்தாலும், அவர்களை நேர்வழிப் படுத்த அதிகம் முயல்பவர்கள் இவர்களாக தான் இருப்பார்கள். இவர்கள் அறிவுரை கூறுகிறேன், மனதை தேற்றுகிறேன் என்று பூசி முழுகாமல், அன்பாக உண்மையை எடுத்துரைத்து நல்வழி கூறுவார்கள்.
மனசாட்சியின் படி நடப்பவர்கள்
தன்னை சுற்றி இருப்பவர்கள் என்ன தவறு செய்தலும், அதை சுட்டிக்காட்டி, தங்களது மனசாட்சிக்கு எதிராக நடக்காமல் இருப்பவர்கள். மற்றும் சிறு சிறு விஷயமாக இருந்தாலும் அதை கூர்ந்து கவனித்து செய்பவர்கள்.
வேலையில் கில்லி
கேலி கிண்டல் என்று சில சமயங்களில் சில்லித்தனமாக நடந்துக் கொண்டாலும், வேலையில் சொல்லி அடிக்கும் கில்லியாக இருப்பார்கள். படிப்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி.
சலிப்பு இருக்காது
எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும், எவ்வளவு கடின வேலையாக இருந்தாலும் இவர்கள் அதிகம் சலிப்படைய மாட்டர்கள். முடிந்த வரை மற்றவருக்கும் சலிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வார்கள்.
உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ளுதல்
அனைவருமே, அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை தவிர்த்து அனைத்தையும் பகிர்ந்துக் கொள்வார்கள். இதனால் இவர்களுக்கு மன அழுத்தம் வரவே வராது.
விரைவாக நட்பு பாராட்டுதல்
அலுவலகம், கல்லூரி, வேறு புதிய இடம் என எதுவாக இருந்தாலும், விரைவாக புதிய நபர்களுடன் நட்பு பாராட்டுவார்கள். இது இவர்களது பெரிய பலமாக இருக்கிறது.
வழிநடத்தி செல்லுதல்
எந்த ஒரு கடினமான காரியமாக இருந்தாலும், சூழலாக இருந்தாலும் அதை சரியாக, வெற்றிகரமாக வழிநடத்தும் மனப்பாங்கு இவர்களுக்கு இருக்கிறது.
அக்கறை
தன் வாழ்க்கை, பிறர் வாழ்க்கை என்று பாராமல் பொதுவான பார்வையில் பார்ப்பவராக இவர்கள் இருப்பார்கள். அனைவருக்கும் பொருள் ரீதியாக உதவ முடியாமல் போனாலும், அனைவரின் மீதும் ஒரே மாதிரியான அக்கறை எடுத்துக் கொள்ளும் குணம் இவர்களிடம் இருக்கும்.