ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் தன் தங்கையை வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட நண்பனை அண்ணன் கொன்ற சம்பவம் குறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா சிறையில் நீதிமன்ற காவலில் இருந்தபோது மனீஷ் மற்றும் விகாஸ் என்ற இருவர் நண்பர்களாகியுள்ளனர். இதில் விகாஸ் பெட்ரோல் பங்க்கில் கொள்ளையடித்ததற்காகவும் மனீஷ் பாலியல் வன்புணர்வு வழக்குக்காகவும் நீதிமன்றக் காவலில் இருந்துள்ளனர்.
முதலில் சிறையில் இருந்து வெளிவந்த விகாஸ் மனீஷின் ஜாமீனுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன் பிறகு அவரை விகாஸ் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். விகாஸின் தங்கையுடன் நட்பாக பழகிய மனீஷ் 10 மாதங்களுக்கு முன்பு அவரது தங்கை பூஜாவை வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து விகாஸ் மனீஷை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் பூஜாவும் மனீசும் டெல்லி சென்று அங்கு வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு விகாஸை சந்திக்க வந்த மனீஷை விகாஸ் கொலை செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை ராஜ்கர் பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் மனீஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விகாஸ் தலைமறைவாகி விட்டதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் காவல் துறையினர் கூறினர்.