மாடல் அழகியாக இருந்து கன்னட படவுலகில் நுழைந்து நடிகை ஆனவர், மரியா சூசைராஜ். பின்னர் ஓரிரு தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் குஜராத் மாநிலம், வதோதராவில் விமான டிக்கெட் பதிவு செய்து தரும் நிறுவனம் ஒன்றை நடத்தினார்.
இந்த நிறுவனத்தில் 1,200-க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் விமான டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்துள்ளனர். முதலில் பதிவு செய்து விட்டு, பின்னர் அந்த விமான டிக்கெட்டுகளை அவர்களுக்கு தெரியாமல் ரத்து செய்து ரூ.2½ கோடியை மோசடி செய்து சுருட்டிக்கொண்டார்.
இது தொடர்பான புகார்களின்பேரில் ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இதில் அவரது கூட்டாளியாக செயல்பட்ட பரோமிதா சக்கரவர்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மரியா, 2008-ம் ஆண்டு, மும்பையில் டி.வி. தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை செய்யப்பட்ட வழக் கில், சாட்சியங்களை மறைத்ததாக கைதாகி, 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து பின்னர் விடுதலை ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.