சென்னை ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஹேமலதா (வயது 32). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் ஹேமலதா கூறியதாவது:-
எனது சொந்த ஊர் தெலுங்கானா மாநிலம் வாரங்கல். நான் தெலுங்கில் 3 படங்களில் நடித்துள்ளேன். சினிமா மற்றும் விளம்பர படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளேன். ஐதராபாத்தில் எடிட்டிங் ஸ்டூடியோ உள்ளது. இவைகளில் சம்பாதித்த பணத்தை சினிமா தயாரிப்பில் இழந்துவிட்டேன். என்னைவிட வயது குறைந்த இளையராஜா என்பவர் என்னை காதலிப்பதாககூறினார். இளையராஜா ‘முயல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘அண்டாவை காணோம்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
நான் ஏற்கனவே காதல் பிரச்சினையில் மாட்டி இருப்பதால், திருமண வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினேன். ஆனால் இளையராஜா, தன்னை காதலிக்கவில்லை என்றால் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று பயமுறுத்தினார். இதனால் நானும் அவரை காதலித்தேன். வீட்டு பூஜை அறையில் தாலி கட்டி என்னை மனைவியாக்கிக் கொண்டார்.
இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். அதன் விளைவாக நான் கர்ப்பமானேன். சினிமாவில் பெரிய ஆளாக வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறி கருவை கலைக்கச் சொன்னார். அதனால் கருவை கலைத்துவிட்டேன். தற்போது என்னை தூக்கி எறிந்துவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறார். அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அவர் கொடுத்த இந்த புகார் குறித்து சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடக்கிறது. ஹேமலதா தானும், இளையராஜாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஆதாரமாக வெளியிட்டார்.
நடிகரின் பெற்றோர் பேட்டி : ஹேமலதா புகார் கூறிய நடிகர் இளையராஜாவின் தந்தை சி.ஆர்.ராஜா, தாயார் கண்மணி ஆகியோர் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் வசிக்கிறார்கள். அவர்களிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது, ஹேமலதாவின் புகாரை, பொய்யான புகார் என்று மறுத்தனர். ஏற்கனவே இதுபோன்ற புகாரை மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் ஹேமலதா கொடுத்ததாகவும், பின்னர் விசாரணைக்கு வராமல் சென்றுவிட்டதாகவும், தனது மகனுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தவும், பண ஆசையாலும் இதுபோன்ற தவறான புகாரை மீண்டும் கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.
நடிகர் இளையராஜாவிடம் பேசவேண்டும் என்று கேட்டபோது, ‘அவர் சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை சென்றுள்ளதாகவும், அவர் தற்போது என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிப்பதாகவும் தாயார் கண்மணி கூறினார். இளையராஜாவின் தந்தை சி.ஆர்.ராஜா முக்கிய அரசியல் கட்சி பிரமுகர். தான் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பதாகவும், தனது மகன் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக தண்டனை கொடுக்க தயங்கமாட்டேன் என்றும், ஹேமலதா கொடுத்துள்ள புகாரை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.