வளசரவாக்கத்தை அடுத்த வள்ளியம்மை நகர் 1–வது தெருவில் சினிமா பெண் நடன இயக்குனர் லலிதாமணிக்கு சொந்தமான வீடு உள்ளது. 2 மாடிகள் கொண்ட இந்த வீட்டில் சினிமா துறையில் பணிபுரியும் 5 பேர் வாடகைக்கு தங்கி உள்ளனர்.
வீட்டின் மாடியில் கஞ்சாசெடி வளர்ப்பதாக வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்த போது மாடியில் உள்ள தொட்டியில் 3 அடி உயரத்தில் 6 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நடன இயக்குனர் லலிதாமணி மற்றும் வாடகைக்கு இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பக்கத்து தெருவில் வசிக்கும் லலிதா மணியின் உறவினரான அபிஷேக் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிந்தது.
படநிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர் உடன் பணிசெய்யும் தொழிலாளர்களை லலிதாமணி வீட்டில் தங்க வைத்து இருந்தார். இதனால் அவர்கள் கஞ்சாசெடி பற்றி வெளியில் சொல்லவில்லை. இந்நிலையில் தலைமறைவாக இருந்த அபிஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானதால் வீட்டில் கஞ்சாசெடி வளர்த்து பயன்படுத்தி வந்ததாக அவர் தெரிவித்து உள்ளார். கஞ்சா செடி எப்படி கிடைத்தது என்பது குறித்து அபிஷேக்கிடம் விசாரணை நடந்து வருகிறது.