புஷ்பா படம் பார்த்த சிறுவர்கள், அதில் வருவதைப் போல கொலை சம்பவம் செய்து பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த வெற்றிப்படம் புஷ்பா. கேங்ஸ்டர்களை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைப்பதாக இருந்தது நமக்குத் தெரிந்த ஒன்று தான், ஆனால் அதே படத்தை பார்த்து அதில் இருக்கும் கொலை சம்பவத்தை மையமாக வைத்து அதே போல ஒரு கொலையை மூன்று சிறுவர்கள் செய்த சம்பவம் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் கொலை சம்பவத்தை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி புகழ் பெறவும் சிறுவர்கள் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.
டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் சிபு என்ற இளைஞர், அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த புதன் கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த சிபுவை வழிமறித்த மூன்று சிறுவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிபுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் சிபு கத்தியால் வெட்டப்படுவதை ஒரு சிறுவன் வீடியோ எடுத்துள்ளான்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சிபுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெல்லி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது சிபு வெட்டப்படுவதை சிறுவன் ஒருவன் வீடியோ எடுக்கும் காட்சி பதிவாகி இருப்பதை பார்த்து, அதனடிப்படையில் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் வெளியான புஷ்பா, Bhaukaal போன்ற கேங்ஸ்டர் படங்களை பார்த்த சிறுவர்கள், திரைப்படத்தில் வருவதைப் போல கொலை செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தது பொலிசாருக்கு தெரியவந்தது. சிறுவர்களிடம் இருந்து கொலையை வீடியோ எடுத்த மொபைல் போனையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். பொலிசார் விரைந்து மூவரையும் பிடித்ததால் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.