தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் போர் நீர் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போர் நீர் என்பது தாதுப் பொருட்ளான கால்சியம் மற்றும் மக்னீசியம் அளவுக்கு அதிகமாக கலந்திருக்கும் நீர். இந்நீரினை குளிப்பதற்கு பயன்படுத்தும் போது முடி மற்றும் கூந்தலில் அதிகம் பிரச்சனைகளைச் சந்திக்கக்கூடும்.
குறிப்பாக தலைக்கு குளிப்பதற்கு போர் நீரைப் பயன்படுத்தினால், அதில் உள்ள தாது பொருட்கள் நீரில் கரைத்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் ஒரு படலமாக உருவாகி, எண்ணெய் பசை ஊடுருவாமல் தடுக்கும். அடுமட்டுமின்றி ஸ்கால்ப்பில் பொடுகின் உற்பத்தியை அதிகரித்து, மயிர்கால்களை வலிமையிழக்கச் செய்து, முடியின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும்.
இவற்றைத் தடுக்க வழியே இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் இருக்கிறது. இங்கு தமிழ் போல்ட்ஸ்கை போர் நீரினால் முடியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி, உங்கள் முடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
வினிகர் அலசல்
வினிகரில் உள்ள அசிடிட்டி, போர் நீரினால் ஸ்கால்ப்பில் படிந்துள்ள படலத்தை நீக்க உதவும். மேலும் வினிகர் முடியின் pH அளவை சமநிலைப்படுத்தி, முடியை மென்மையாக்கி, பொலிவை அதிகரிக்கும். ஆனால் முடிக்கு பல்சாமிக் வினிகர் என்னும் கருப்பு நிறத்தில் உள்ள வினிகரைப் பயன்படுத்தக்கூடாது. மாறாக வெள்ளை அல்லது ஆப்பிள் சீடர் வினிகரைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் வினிகரை 3 கப் நீரில் கலந்து, ஷாம்பு போட்டு தலைமுடியை அலசியப் பின் இறுதியில் வினிகர் கலவையால் தலைமுடியை அலச வேண்டும். அதற்காக தினமும் தலைக்கு குளித்து இக்கலவையைப் பயன்படுத்தினால், முடி வறட்சி அடையும்.
எலுமிச்சை அலசல்
வினிகரைப் போன்றே எலுமிச்சை சாறும், ஸ்கால்ப் மற்றும் முடியில் போர் நீரினால் உருவாகும் படலத்தை நீக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை 3 கப் நீரில் கலந்து, தலைக்கு ஷாம்பு போட்டு அலசியப் பின், இறுதியில் அக்கலவையால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால், தலையில் பொடுகு இருந்தாலும் போய்விடும்.
தண்ணீர் மென்மைப்படுத்தி (Water Softener)
தண்ணீர் மென்மைப்படுத்திகள் சற்று விலை அதிகமானது என்றாலும், போர் நீரினால் உங்கள் முடி பாதிக்கப்படுவதைத் தடுக்கும். ஏனெனில் இது போர் நீரில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியத்ம் மற்றும் இதர தாதுக்களை முற்றிலும் நீக்கி, நீரை மென்மையாக்கும்.
ஷவர் வடிகட்டி
அனைவராலும் தண்ணீர் மென்மைப்படுத்திகளை வீட்டில் பொருத்த முடியாது. ஆனால் ஷவர் வடிகட்டியைப் பொருத்த முடியும். ஏனெனில் இது மிகவும் விலை மலிவானது. இதுவும் நீரில் உள்ள தாதுக்களை பிரித்து, சுத்தமான நீரைக் கொடுக்கும்.
மழை நீர்
மழை நீர் மிகவும் சுத்தமான மற்றும் மென்மையான நீர். எனவே மழை வரும் போது அந்நீரை சேகரித்துக் கொண்டு, அந்நீரை தலைக்கு குளிக்கப் பயன்படுத்தலாம். இதனால் உங்கள் முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வளர்ச்சியும் அதிகரிக்கும்.
குறிப்பு
எலுமிச்சை சாறு மற்றும் வினிகரை அடிக்கடி தலை முடிக்குப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை காலப்போக்கில் முடியின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, வறட்சியை அதிகரித்துவிடும். வேண்டுமானால் மாதம் 1-2 முறை பயன்படுத்தலாம்.