தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இன்றும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
திரை நட்சத்திரமாக ஜொலித்த குஷ்பு தனது அடுத்த ரவுண்டை அரசியலில் தொடங்கி இருக்கிறார். காங்கிரசில் இணைந்த அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரசின் பிரசார பீரங்கியாக கட்சி பயன்படுத்தி வருகிறது. அவரும் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார்.
சென்னை சூளையில் இன்று சிவாஜி ரசிகர்கள் மற்றும் காங்கிரசார் சிவாஜி பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குஷ்பு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
அவரை ‘தேசிய திலகம்’ என்ற பட்டத்துடன் சிவாஜி ரசிகர்கள் விளம்பரப்படுத்தி இருந்தனர். இதுபற்றி ரசிகர் மன்ற தலைவர் சூளை ராஜேந்திரனிடம் கேட்டபோது, நடிகர் திலகம் சிவாஜி காங்கிரசை வளர்த்தார். அவரைப் போலவே இன்று குஷ்புவும் தேசிய அளவில் காங்கிரசை வளர்க்க பணியாற்றுகிறார். எனவே தேசிய திலகம் என்ற பட்டத்தை நாங்கள் வழங்கி உள்ளோம் என்றார்.
குஷ்பு மகள் உடல்நிலை சரியில்லாததால் கடைசி நேரத்தில் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் சிவாஜி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பெண்களுக்கு இலவச சேலைகளை மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுரேஷ் பாபு, ஜெயகரன், மதுசூதனன், ராஜேந்திரன், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, அமாவாசை உள்பட பலர் கலந்து கொண்டனர்.