தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 18-ந் திகதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதுகின்றன. இரு அணி சார்பிலும் தலைவர், பொதுச்செயலாளர், 2 துணைத்தலைவர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 58 பேர் போட்டியிடுகின்றனர்.
ஒரு சுயேட்சை வேட்பாளர் தலைவர் பதவிக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார். இன்னொரு சுயேட்சை வேட்பாளர் துணைத்தலைவர் பதவிக்கு நிற்கிறார். நடிகர் சங்கத்தில் ஓட்டுப்போட தகுதியுள்ள மொத்த வாக்காளர்கள் 3,139 பேர். இதில் நடிகர் நடிகைகள், மற்றும் நாடக-நடிகர் நடிகைகள் அடங்குவர். வெளியூர்களில் இருந்து 1,175 வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தபாலில் ஓட்டுக்களை அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் 241 பேர் நேரில் வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பினார்கள்.
இவர்களை தவிர்த்து மீதியுள்ள 934 பேருக்கு தபாலில் வாக்களிக்க கடந்த 9-ந் திகதி வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. 12-ந் திகதி முதல் தபால் ஓட்டுகள் சென்னையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தன. தபால் ஓட்டுகள் வந்து சேர்வதற்கு நாளை மறுநாள்(17-ந் திகதி) கடைசி நாள் என்பதால் இன்றுடன் தபால் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்குச்சீட்டுகள் அனைத்தும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.
நேரில் ஓட்டுப்போடுபவர்களுக்கான வாக்குப்பதிவு 18-ந் திகதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களும் நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன், உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளும் நேரில் வந்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.