தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாசருக்கு நம்பர் 1ம், சரத்குமாருக்கு நம்பர் 2ம், விஷாலுக்கு நம்பர் 3ம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 18-ம் திகதி சென்னையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், நடிகர் விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது.
சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும், விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகிறார்கள். மற்றும் இரு அணியிலும் துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகர்-நடிகைகள் போட்டியிடுகிறார்கள்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 3,139 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் வெளியூர்களில் வசிப்பவர்கள் 1,175 பேர். வெளியூரில் வசிக்கும் வாக்காளர்கள் தபால் ஓட்டு மட்டுமே போட முடியும். நேரில் வந்து ஓட்டுப்போடுவதாக இருந்தால் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி முன் அனுமதி பெற வேண்டும்.
தற்போது 241 பேர் நேரடியாக வந்து வாக்குப்பதிவு செய்வதாக தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அவை தேர்தல் அதிகாரியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மீதம் உள்ள 934 பேர் தபால் ஓட்டு போடுகிறார்கள். அவர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள் கடந்த 8-ம் திகதி முதல் 10-ம் திகதி வரை அனுப்பி வைக்கப்பட்டது.
முதலில் நேரில் வருவதாகவும், பின்னர் தபாலில் ஓட்டுப் போடுவதாகவும் மாறி மாறி கடிதம் அனுப்பிய 150 பேர் ஓட்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. தபால் ஓட்டுப்பதிவு நேற்று தொடங்கியது. புதுக்கோட்டையில் 39, மதுரையில் 22 என 61 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. தொடர்ந்து 18-ம் திகதி, சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குச்சீட்டு எண்களை (சின்னங்களை) தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபன் வெளியிட்டுள்ளார்.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமாருக்கு 2 என்ற சின்னமும், நாசருக்கு 1 என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாரவிக்கு 1 என்ற சின்னமும், விஷாலுக்கு 3 என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஜயகுமாருக்கு 5 என்ற சின்னமும், நடிகர் சிம்புவுக்கு 4 என்ற சின்னமும், விஷால் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கருணாசுக்கு 1 என்ற சின்னமும், பொன்வண்ணனுக்கு 3 என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சரத்குமார் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.எஸ்.கண்ணனுக்கு 1 என்ற சின்னமும், விஷால் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்திக்கு 2 என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.