தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசர் வெற்றிபெற்றுள்ளார். பொதுச் செயலாளராக விஷாலும் பொருளாளராக நடிகர் கார்த்தியும் தேர்வுபெற்றுள்ளனர்.
தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசருக்கு 1344 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத்குமாருக்கு 1231 வாக்குகளும் கிடைத்துள்ளன.
1445 வாக்குகளைப் பெற்ற நடிகர் விஷால் தற்போதைய பொதுச் செயலாளர் ராதாரவியைத் தோற்கடித்து அந்தப் பதவியைக் கைப்பற்றினார்.
பொருளாளர் பதவிக்கு விஷால் தரப்பில் நடிகர் கார்த்தியும் சரத்குமார் தரப்பில் எஸ்எஸ்ஆர் கண்ணணும் போட்டியிட்டனர். இதில் 1493 வாக்குகளைப் பெற்று கார்த்தி வெற்றிபெற்றார். எஸ்எஸ்ஆர். கண்ணணுக்கு 1080 வாக்குகளே கிடைத்தன.
துணையைத் தலைவர் பதவியையும் அதே அணியைச் சேர்ந்த கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் கைப்பற்றினர்.
இதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கியப் பதவிகள் அனைத்தையும் ‘பாண்டவர் அணி’ என்று அழைக்கப்பட்ட நடிகர் விஷாலின் அணி கைப்பற்றியுள்ளது.
இந்த முடிவுகளை தேர்தலை நடத்திய முன்னாள் நீதிபதி பத்மனாபன் அறிவித்தார்.