ராமேஸ்வரத்தில் எம்.பி.க்கு சொந்தமான கட்டிட நிறுவனத்தின் பொறுப்பாளர் ராஜ்கிரண். ஒருநாள் இந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தவறி விழுந்து இறந்து விடுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சினை காரணமாக அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வேறு இடத்துக்கு போய் விடுகிறார்கள்.
கட்டிட வேலையை குறிப்பிட்ட நாளில் முடிக்க ராஜ்கிரணுக்கு கூலி ஆட்களை தேவைப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள் சிலர் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டு, முகாமுக்கு திரும்பிக் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
இதை அறிந்த ராஜ்கிரண் அவர்களுக்கு கட்டிட வேலை கொடுக்கிறார். 2 குழுக்களாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைப்பதாக வாக்குறுதியும் அளிக்கிறார். கட்டிட வேலை செய்யும் நவீன் சந்திரா அவருடன் சித்தாளாக வேலை பார்க்கும் இலங்கை அகதிப் பெண் ரூபா மஞ்சரியை காதலிக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு பேருக்கும் மோதல் வருகிறது. பின்னர் அது காதலாக மாறுகிறது. திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்கிறார்கள்.
இதற்கிடையே முகாமில் இருந்து தப்பியதாக கூறி கட்டிட வேலை செய்யும் அகதிகள் அனைவரையும் போலீசார் கைது செய்கிறார்கள். நவீன்சந்திரா காதலியை மீட்டு வருகிறார். அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக எம்.பி. வாக்குறுதி அளிக்கிறார். அது நிறைவேறியதா? அகதிகள் கதி என்ன? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்கிறது மீதி கதை.
கட்டிட நிறுவன பொறுப்பாளராக வரும் ராஜ்கிரண் அகதிகளை சந்திப்பது, அவர்களுக்காக பரிந்து பேசுவது, தொழிலாளிகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வது, உச்சக்கட்டத்தில் ஆவேசப்படுவது என்று படம் முழுவதும் நிறைத்திருக்கிறார். கட்டிட தொழிலாளியாக வரும் நவீன் சந்திரா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்த்திருக்கிறார். காதலியிடம் சண்டை போடுவது, அவரிடம் காதல் செய்வது, எந்த எதிர்ப்பையும் சமாளிக்க தயாராவது என்று அனைத்திலும் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். காதலியை காப்பாற்றுவதற்காகவே போலீசாரிடம் மோவதுவதும், பிறகு வாங்கிக் கட்டிக்கொள்வதும் உருக்கம்.
ரூபா மஞ்சரியின் பயமும், தவிப்பும் ஈழத்தில் சிரமங்களை சந்திக்கும் பெண்களை கண்முண் கொண்டு வந்து நிறுத்துகிறது. உச்சகட்ட காட்சி கொதிக்க வைக்கிறது. மேஸ்திரியாக வரும் தம்பி ராமையா சிரிக்க வைக்கிறார். செல்வா, போஸ் வெங்கட், ஏ.வெங்கடேஷ், அல்வாவாசு, பூராம், சோனா உள்பட எல்லோரும் கதையின் கருவை காப்பாற்ற கைகொடுத்திருக்கிறார்கள்.
இலங்கை தமிழ் அகதிகள் அனுபவிக்கும் துன்பங்களை அப்படியே காட்சியாக்கி இருக்கிறார் இயக்குனர் சத்யசிவா. தமிழ் சொந்தங்களை நம்பி வருபவர்களை இப்படியா நடத்துவது என்று கேட்க வைத்திருக்கிறார். உச்ச கட்டம் உண்மையாகவே சிந்திக்க வைக்கும் இடம். ஈழத்தமிழர்களை ஆதரியுங்கள் அல்லது விட்டு விடுங்கள். அவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று ராஜ்கிரண் வாயால் சொல்ல வைத்திருப்பது சாட்டையடி. இயக்குனரின் துணிச்சலை சத்தியமாக பாராட்டலாம்.
மது அம்பாட் ஒளிப்பதிவு உணர்ச்சிபூர்வமான காட்சிகளை உயிரோட்டமாக காட்டுகிறது. சினேகன், கபிலன் வைரமுத்து பாடல்களும் அதற்கு பொருத்தியிருக்கும் என்.ஆர். ரகுநந்தன் இசையும் உருகச் செய்து பரவசப்படுத்துகிறது.
மொத்தத்தில் ‘சிவப்பு’ உறவின் துடிப்பு.