காகத்திய ஆட்சி பல சிற்றரசுகளை உள்ளடக்கியுள்ளது. இந்த ஆட்சியின் அரசனுக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை ஆணாக இருக்கவேண்டும் என்று அந்த நாட்டு மக்கள் உள்பட அனைவரும் விரும்புகின்றனர். ஏனென்றால், அந்த குழந்தை ஆணாக இருந்தால், பக்கத்து நாட்டு பகையாளியான தேவகிரி அரசனிடம் இருந்து நம் மக்களை காப்பாற்றும் என நம்புகின்றனர்.
ஆனால், இதை அரசனின் தம்பிகளான சுமனும், ஆதித்யாவும் விரும்பவில்லை. ஏனென்றால், பெண் குழந்தை பிறந்தால், அதையே காரணம் காட்டி நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கும் நயவஞ்சகர்கள். இவர்கள் நினைத்தது போல் அரசனுக்கு பெண் குழந்தைதான் பிறக்கிறது. இந்த செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிந்தால், நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்று பயந்து, ராஜகுருவான பிரகாஷ் ராஜ் பிறந்தது ஆண்தான் என்று கூறச் சொல்கிறார். அதன்படி, அரசனுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக நாடு முழுவதும் அறிவிக்கின்றனர்.
அதன்படி, குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை 14 வருடங்கள் காட்டுக்கு அனுப்பி வைத்து, அங்கு ஒரு ஆணாகவே வளர்க்கிறார்கள். வாள்சண்டை, கத்தி சண்டை என ஒரு ஆணுக்கு நிகராக அனைத்து கலைகளிலும் வல்லவராக திகழ்கிறார். 14 வருடங்களுக்கு பிறகு தனது சொந்த நாட்டுக்கு திரும்புகிறார் அனுஷ்கா. அங்கு வந்தபிறகு அவர் தான் பெண் என்பதை அறிகிறார். ஆனால், ராஜகுருவோ இப்போது நீ பெண் என்பது வெளியே தெரிந்தால் நமது நாட்டு மக்களின் நிலை பரிதாபமாகிவிடும். எனவே, அதை மறைக்க சொல்கிறார். அனுஷ்காவும் நாட்டு மக்களின் நலனுக்காக ஆண் என்று பொய் கூறியே வாழ்கிறார்.
ஆனால், சுமனும், ஆதித்யாவும் மோப்பம் பிடித்து, அனுஷ்கா ஒரு பெண்தான் என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். இவர்களுடன் சில சிற்றரசர்களும் சேர்ந்துகொண்டு, பொய் கூறிய அனுஷ்காவை நாட்டை விட்டே துரத்துகின்றனர். இதையறிந்த தேவகிரி நாட்டினர், காகித்ய ஆட்சியின் மீது படையெடுக்கின்றனர். அதேநேரத்தில், சுமனும், ஆதித்யாவும் சிற்றரசர்களுடன் இணைந்து நாட்டு மக்களை துன்புறுத்துகின்றனர். இதனால், பாதிப்படைந்த மக்கள் நாட்டை விட்டு ஒதுக்கிய அனுஷ்காவை நாடிச் செல்கின்றனர்.
இறுதியில், அனுஷ்கா நாட்டு மக்களை எதிரிகளிடமிருந்து, சூழ்ச்சியாளர்களிடமிருந்தும் எப்படி நாட்டை மீட்கிறார் என்பதே மீதிக்கதை.
அனுஷ்கா, ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். அவர் ஆணாக நடிக்கும்போது உயரம், தோற்றம் என அனைத்திலும் ஆண்களுக்கு உண்டான கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். அதேபோல், யானையை அடக்குதல், வாள் சண்டை போடுதல் என ஹீரோக்களுக்கே சவால் விடுகிறார்.
ராணா அனுஷ்காவுக்கு நண்பன், காதலன் என தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். ஆனால், பாகுபலியில் மிரட்டலாக பார்த்துவிட்டு, இதில் அமைதியாக நிற்க வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அல்லு அர்ஜூன் படத்தில் மொத்தம் 25 நிமிட காட்சிகள்தான் வருகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்துதான். விசில் சத்தம், கைதட்டல், ஆரவாரம் என தியேட்டரை அதிர வைக்கிறார்கள்.
ராஜகுருவாக வரும் பிரகாஷ் ராஜை சுற்றிதான் கதை நகர்கிறது. தனது அனுபவ நடிப்பால் கைதட்டல் பெறுகிறார். சுமன், ஆதித்யா இருவரும் நயவஞ்சகர்களாக குரூரம் காண்பித்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில்தான் எடுத்துள்ளனர். படத்தில் பல கதைகள் வந்தாலும், அதை இழுக்காமல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிக அழகாக காட்டியுள்ளார் இயக்குனர் குணசேகர்.
முதல் பாதியில் சாகச காட்சிகள் அதிகமாக இருக்கின்றன. இரண்டாம் பாதி கொஞ்சம் நீளமாக இருக்கிறது. போர் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது. படத்திற்கு பெரிய பலம் பா.விஜய்யின் வசனங்கள்தான். பெண்மையை போற்றும் வசனங்கள் படம் முழுக்க இடம்பெற்றிருப்பது சிறப்பு. அனுஷ்கா படத்தை ஒரு பக்கம் தாங்கி நின்றாலும், அவரையும் தாண்டி இளையராஜா தன்னுடைய இசையால் மேலும் தாங்கி பிடித்திருக்கிறார். இவரது பின்னணி இசை படத்திற்கு மேலும் பிரம்மாண்டம் கூட்டியிருக்கிறது. அஜயன் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘ருத்ரமாதேவி’ சிம்மாசனம்.