நமது வாழ்க்கையின் எந்த ஒரு சூழலிலும் பணம் ஒன்று மட்டும் இருந்தாலும் முழுமை அடையாது. உங்கள் வெற்றியின் போதோ, சாதனையின் போதோ பணத்திடம் நீங்கள் பகிர்ந்துக் கொள்ள முடியாது. உறவுகள் தான் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியடைய வைக்கிறது. தோல்வியில் தோள்கொடுக்க உறவுகள் தான் வருமே தவிர செல்வாக்கு அல்ல.
இந்த சமூகத்தில் நீங்கள் மேலோங்கி விளங்க, உங்கள் வாழ்க்கை மேன்மையடைய நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சில தருணங்களில் எப்படி இருக்க வேண்டும், எவ்வாறு கையாள வேண்டும், எதிர்க்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி, கோபம், வறுமை என நீங்கள் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய சூழல்கள் நிறைய இருக்கின்றன….
ஏழ்மையிலும் நேர்மை
ஏழ்மையான சூழலிலும் நீங்கள் நேர்மையாக நடந்துக் கொள்வது நிறைய உறவுகளை சம்பாதிக்க உதவும். இதனால், நீங்கள் கேட்காமலேயே உதவ நிறைய பேர் முன்வருவார்கள்.
கோபத்திலும் பொறுமை
நல்ல உறவுகளுக்குள் பிரிவு ஏற்பட காரணமே இந்த கோபம் தான். ஒரு சூழல் உங்களை கோபமடைய வைக்கிறது என்றால், அந்த நேரத்தில் நீங்கள் பொறுமையாக முடிவெடுக்க வேண்டியது அவசியம். இதனால், நீங்கள் உங்கள் உறவுகள் மற்றும் மதிப்பை இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
தோல்வியிலும் விடாமுயற்சி
தோல்விகளை காணாத வெற்றி இனிக்க வாய்ப்பில்லை. நெல்லிக்கனியை உண்ட பிறகு தண்ணீர் பருகி பாருங்கள் அப்போது தான் தண்ணீரின் சுவையை நீங்கள் உணர முடியும். எனவே, தோல்வியை கடந்து வரும் விடா முயற்சி வெற்றி பெற உதவும்.
வறுமையிலும் உதவி செய்யும் மனம்
வறுமையிலும் நீங்கள் செய்யும் உதவியானது, உங்கள் பண்பினை மேலோங்கி காண்பிக்கிறது. இது சமூக வாழ்க்கையில் உங்களை வேறு நிலைக்கு உயர்த்தும். உதவி என்பது பணம் மட்டும் அல்ல, அதையும் தாண்டிய மனம்.
துன்பத்திலும் துணிவு
இழப்புகள் காணாத யாருமே இவ்வுலகில் இல்லை. பணம் இருப்பவன் நிம்மதியை இழக்கிறான். பணம் இல்லாதாவன் பொருகளை இழக்கிறான். இழப்பினால் ஏற்படும் துன்பத்தை தாண்டி வர துணிவு வேண்டும். இந்த துணிவு, உங்களுக்கு வலு சேர்க்கும் அளவிற்கு நிறைய உறவுகளை, நண்பர்களை சம்பாதித்து கொடுக்கும். இதனால் நீங்கள் இழந்ததை மீண்டும் எளிதாக பெற முடியும்.
செல்வத்திலும் எளிமை
எளிமை மிகவும் முக்கியமானது. அதிலும் செல்வந்தனாக இருக்கும் போது. பணம் என்பது மேகத்தை போல அது வரும் போகும். ஆனால், ஓர் மனிதனில் புகழ் என்பது மழையை போல வரும் போது சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். வீண் விரையும் செய்துவிட்டால் மீண்டும் உடனே நினைக்கும் போதெல்லாம் அது கிடைத்துவிடாது.
பதவியிலும் பணிவு
பல உறவுகளில் விரிசல் ஏற்பட காரணமாக இருக்கும் ஆணவத்தை பரிசளிப்பது பதவி எனும் கொடூரன். பதவி என்பது நிறைய வேலைகளை மற்றவர்களுக்காக செய்யவே தவிர அதை துஷ்பிரயோகம் செய்து அடிமைகளாக நடத்த அல்ல. எனவே பணிவாக நடந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இவை அனைத்தும் உங்களை சமூக உறவில் வலுவாக இருக்கவும், உங்களை சமூகத்தில் மேன்மையடையவும் உதவும்.