நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்ற நிலையில், சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கும் 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.
இந்த சங்கத்தில் டி.வி. நடிகர், நடிகைகள் 1,300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள் உள்பட 23 பதவிகள் உள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் நளினி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக பூவிலங்கு மோகன், பொருளாளராக டி.வி.தினகர் ஆகியோர் தேர்வு பெற்றனர். இவர்களுடைய பதவி காலம் 2017–ம் ஆண்டு வரை இருக்கிறது.
சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெயர்களை பதிவு செய்தவர்கள் மட்டும்தான் டி.வி. தொடரில் நடிக்க வேண்டும். இந்தி தொடர்களை மொழி பெயர்த்து டி.வி.க்களில் ஒளிபரப்பு செய்வதால் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பிரிவினர் வற்புறுத்தி வந்தனர். ஆனால் இதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. இதனால் நடிகர் சங்கத்தில் பதவி வகிக்கும் நிர்வாகிகள் மீது அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக சங்கத் தலைவர் நளினி, பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யாபாரதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் கடந்த புதன்கிழமை தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இவர்களை சமாதானம் செய்து வைக்க நடந்த முயற்சி தோல்வி அடைந்தது.
புதிய நிர்வாகிகளை ஒரு மனதாக தேர்வு செய்யும் முயற்சியும் வெற்றி பெறவில்லை. தனக்கு தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் சங்க நிர்வாகத்தை கவனிக்க முடியவில்லை. எனவே பதவியை ராஜினாமா செய்தேன் என்று நளினி கூறியுள்ளார்.
இதையடுத்து, வருகிற டிசம்பர் 13–ந்தேதி சின்னத்திரை நடிகர்கள் சங்க தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நளினிக்கு பதில் தலைவர் பதவிக்கு யார் என்று கேள்வி எழுந்துள்ளது.