இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (28) அலரிமாளிகையில் நடைபெற்றது.
அதன்போது, 2014 ஆம் ஆண்டு வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையம் இணைய தொழில்நுட்பம் ஊடாக பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோரினால் அது மக்கள் மயப்படுத்தப்பட்டது.
வட மாகாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாசார நிலையத்தை இலங்கைக்கு கையளிக்கும் வகையிலான ஆவணங்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களினால், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டு இலங்கை பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையே இணையவழி ஊடாக நடைபெற்ற இராஜதந்திர கலந்துரையாடலின் உடன்பாட்டிற்கு அமைய, பௌத்த மதத்தின் மறுமலர்ச்சி உள்ளிட்ட ஏழு விடயங்களுக்காக இந்திய அரசு வழங்கிய 15 மில்லியன் டொலர் தொகைக்கான ஒப்பந்த பரிமாற்றமும் இதன்போது இடம்பெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பௌத்த மதத்தை மேம்படுத்துதல், கலாசாரத்தை மேம்படுத்துதல், புத்த பிக்குமாரின் கல்வியறிவை மேம்படுத்துதல், இரு நாடுகளுக்கு இடையிலான யாத்ரீகர்களை மேம்படுத்துதல், நினைவுச்சின்னங்கள் கண்காட்சி உள்ளிட்ட ஏழு நோக்கங்களுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது.