ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்(48).
‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் மீண்டும் இவர் நிலைநாட்டினார்.
இதற்கு முன்னதாகவும், பிறகும் திரை இசைத்துறைக்கான நான்கு தேசிய விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் வாங்கி குவித்துள்ள சென்னையை சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக் கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், பிரபல இந்தி பின்னணிப் பாடகிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே சகோதரிகளின் தம்பியான பண்டிட் ஹிருதயநாத் மங்கேஷ்கர் பெயரால் இசையுலகில் சாதனை புரிந்த நபர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதினை ஏ.ஆர். ரகுமானுக்கு பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சுபாஷ் கய் நேற்று வழங்கினார்.
ஹிருதயநாத் மங்கேஷ்கரின் 78-வது பிறந்தநாளையொட்டி, மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரகுமானை பாராட்டிப் பேசிய சுபாஷ் கய், ‘ இசைக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்த ஏ.ஆர். ரகுமானால் இந்த நாடு மிகவும் பெருமையடைந்துள்ளது.
அவருக்கு இந்தியோ, பஞ்சாபி மொழியோ தெரியாது. ஆனால் 70 இரவுகள் கடுமையாக உழைத்து எனது ‘தால்’ படத்துக்கு இசையமைத்ததன் மூலம், மிகத்திறமையான இசையமைப்பாளர் என்பதை ஏ.ஆர். ரகுமான் நிரூபித்துள்ளார்’ என குறிப்பிட்டார்.
விருதைப் பெற்றுகொண்டு, நன்றி தெரிவித்து பேசிய ஏ.ஆர்.ரகுமான், ‘இந்த விருதை எனக்கு அளித்த மங்கேஷ்கரின் குடும்பம், பலதலைமுறைகளை கடந்து உயர்ந்த இசை பாரம்பரியத்த்தை கட்டிக்காத்து வருகின்றது. பண்டிட் ஹிருதயநாத் அவர்களின் இசை நமக்கெல்லாம் ஊக்கசக்தியைப் போன்றது’ என கூறினார்.
இவ்விழாவில், கிராமி விருது வென்ற இந்துஸ்தானி சங்கீத வல்லுனர் விஷ்வ மோகன் பட், கடந்த (2014) ஆண்டு கிராமி விருது வென்ற ரிக்கி கெஜ் உள்பட ஏராளமான இசையுலகப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது தோற்றுவிக்கப்பட்ட பின்னர், பாடகிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, நடிகர் அமிதாப் பச்சன், பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா ஆகியோருக்கு கடந்த நான்காண்டுகளாக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை பெறும் ஐந்தாவது நபர், ஏ.ஆர். ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.