பாக்கியராஜ் – பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு – கீர்த்தி திருமணம் கடந்த ஆகஸ்டு மாதம் 21–ந் திகதி சென்னையில் நடந்தது. விஜய் தலைமை தாங்கி தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.
சாந்தனு நடிகர். கீர்த்தி டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர். இந்த காதல் தம்பதி தலைத் தீபாவளியை எப்படி கொண்டாடப் போகிறார்கள்? சாந்தனுவிடம் இது பற்றி கேட்டோம்…
கே: திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது?
ப: மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்துக்கு முன்பு நண்பர்கள் மிகவும் பயம் காட்டினார்கள். அப்படி எதுவும் இல்லை. நாங்கள் மிகவும் நன்றாக இருக்கிறோம்.
கே: நீங்கள் கீர்த்தியை விரும்பி மணந்தது எப்படி?
ப: சிறுவயதில் இருந்தே கீர்த்தியுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. நான் நுங்கம் பாக்கம் – அவர் தி.நகர். கீர்த்தியின் தாயார் தான் எனக்கு நடனம் சொல்லிக் கொடுத்த குரு. இதனால் கீர்த்தியுடன் பழக வாய்ப்பு கிடைத்தது.
கே: கீர்த்தி உங்கள் குடும்பத்துடன் எப்படி பழகுகிறார்?
ப: அவரும் பயந்து கொண்டே தான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அம்மா, அப்பா அன்புடன் பழகுவதை பார்த்ததும் அவருடைய பதட்டம், பயம் எல்லாவற்றையும் விட்டு விட்டார். அனைவருடமும் அன்பாக பழகுகிறார். எனக்கு எந்த வித சுமையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்.
கே: இந்த வருடம் தலைத் தீபாவளியை இருவரும் எப்படி கொண்டாடப்போகிறீர்கள்?
ப: புதிய அனுபவம். நல்ல முறையில் கொண்டாடுவோம்.
கே: உங்கள் வீட்டிலா? அவர்கள் வீட்டிலா?
ப: இருவர் வீட்டிலும் முறைப்படி கொண்டாடுவோம். பெற்றோரிடம் வாழ்த்து பெறுவோம். என்றாலும் இந்த தலைத்தீபாவளியை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்று அவர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்.
சின்ன வயதில் தீபாவளி தினத்தில் காலையில் குளித்து விட்டு, புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பேன். பட்டாசு தயாரிப்பில் குழந்தை தொழிலாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்த பிறகு, நான் 10–வது வகுப்பு படிக்கும் போதே பாட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டேன். இப்போதும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது இல்லை.
இந்த முறை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடும் அனுபவம் புதிதாக இருக்கும். மகிழ்ச்சியாகவும் இருக்கும். எங்கள் திருமண வாழ்க்கையின் முதல் தீபாவளி மறக்க முடியாததாகவும் இருக்கும்.