மிரிஹான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த 26 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் களுபோவில போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணையின் பின்னர் அவர்கள் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 31 ஆம் திகதி இரவு மிரிஹான பகிரிவத்த மாவத்தைக்கு அருகில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
39 மில்லியன் பெறுமதியான பொதுச் சொத்துக்கள் இச்சம்பவத்தில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 15 பேர் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதோடு ஏனைய ஆறு பேரும் ஏப்ரல் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.