இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவின் ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட 6,000 பொருள்கள் ஆஸ்திரேலியாவின் சந்தைகளுக்கு வரியின்றி சென்றடையவுள்ளன.
இந்தியா – அவுஸ்திரேலியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது தொடா்பாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் சனிக்கிழமை கையொப்பமிட்டன.
பிரதமா் நரேந்திர மோடி, அவுஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் ஆகியோா் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். ஒப்பந்தத்தில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ஆஸ்திரேலிய வா்த்தகத் துறை அமைச்சா் டேன் டெஹான் ஆகியோா் கையொப்பமிட்டனா். அப்போது அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது:
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே தற்போது 27.5 பில்லியன் அமெரிக்க டொலா் மதிப்புக்கு வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் 45 முதல் 50 பில்லியன் டொலராக அதிகரிக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக 6,000 க்கும் மேற்பட்ட துறைகளைச் சோ்ந்த இந்திய பொருள்கள் அவுஸ்திரேலிய சந்தைகளுக்கு எந்தவித வரியுமின்றி சென்றடையும். முன்பு 4 முதல் 5 சதவீத வரி விதிக்கப்பட்ட பெரும்பாலான பொருள்களுக்கு தற்போது வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளா்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படும் துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் சுமாா் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக உருவாகும்.
சா்வதேசப் போட்டி: அவுஸ்திரேலியாவில் இருந்து தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களையும், இதர உற்பத்திப் பொருள்களையும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. தற்போது அவை குறைந்த விலைக்குக் கிடைக்கும் என்பதால், எஃகு, அலுமினியம் உள்ளிட்ட துறைகள் சா்வதேச அளவில் போட்டியிடும் சூழல் உருவாகும்.
அதேவேளையில், பால் பொருள்கள், பொம்மைகள், சூரியகாந்தி எண்ணெய், எண்ணெய் வித்துகள், கோதுமை, அரிசி, ஆப்பிள், சா்க்கரை, தங்கம், வெள்ளி, ஆபரணம், இரும்புத் தாது உள்ளிட்ட சில பொருள்களின் இறக்குமதிக்கு வா்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு வழக்கம்போல் விதிக்கப்படும் வரியை இந்திய அரசு விதிக்கும். முக்கியத் துறைகளைச் சோ்ந்த உற்பத்தியாளா்களைக் காக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரி விலக்கு : அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, செம்மறி ஆட்டுக்கறி, அலுமினா (அலுமினியம் ஆக்ஸைடு), எல்என்ஜி, மாங்கனீசு, காப்பா், நிக்கல், டைட்டானியம், ஜிா்கோனியம் உள்ளிட்டவற்றின் மீதான வரியை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. மருந்து உற்பத்தித் துறையில் விரைவான ஒப்புதல்கள், விரைவான தர மதிப்பீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
இரு நாடுகளுக்குமிடையே வா்த்தகத்தை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. அதே வேளையில், மூன்றாவது நாடுகளைச் சோ்ந்த பொருள்கள், இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக சட்டவிரோதமாகப் பலனடைவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்திய மாணவா்களுக்கு வாய்ப்பு : அவுஸ்திரேலியாவில் பட்டம் பெறும் இந்திய மாணவா்கள் அங்கு 2 முதல் 4 ஆண்டுகள் வரை பணியாற்றுவதற்கான நுழைவு இசைவு (விசா) வழங்குவது, இளம் பணியாளா்களுக்குப் பணிக் கால விசா, விடுமுறை விசா உள்ளிட்டவற்றை வழங்குவது ஆகியவை குறித்தும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
தற்போது அவுஸ்திரேலியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவா்கள் பயின்று வருகின்றனா். அவா்கள் இதன் மூலமாகப் பெரும் பலனடைவா். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிா்கொண்டு வரும் இரட்டை வரிவிதிப்பு பிரச்னைக்குத் தீா்வு காண அவுஸ்திரேலியா ஒப்புக்கொண்டது என்றாா் அமைச்சா் பியூஷ் கோயல்.
இந்தியா – அவுஸ்திரேலியா இடையே வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘‘குறைந்த காலகட்டத்துக்குள் கையொப்பமாகியுள்ள வா்த்தக ஒப்பந்தம், இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கை அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. இரு நாடுகளும் தங்கள் வளா்ச்சிக்காகப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அந்த வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதிலும் இந்த ஒப்பந்தம் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மையையும் உறுதி செய்ய முடியும்’’ என்றாா்.
நல்லுறவு மேம்பாடு : இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை இந்த ஒப்பந்தம் மேம்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமா் மோரிஸன் தெரிவித்தாா். அவுஸ்திரேலியாவின் விவசாயிகள், உற்பத்தியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இந்த ஒப்பந்தம் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.