மெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் இருந்து 101 பயணிகளுடன் வெனிசுலாவுக்கு புறப்பட்ட டைனமிக் இன்டர்நேஷனல் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது திடீரென தீப்பிடித்து எரிந்தால் உள்ளே இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
டைனமிக் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767-200ER ரக விமானம் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லவ்டர்டேல் விமான நிலையத்தில் இருந்து (உள்ளூர் நேரப்படி) நேற்று மதியம் 12.30 மணியளவில் 101 பயணிகள், உட்பட விமானக்குழுவினருடன் வெனிசுலாவின் தலைநகரமான காரகாஸ் நோக்கி புறப்பட்டது.
ஓடு பாதையில் சுற்றி வட்டமடித்து வேகம் எடுத்தபோது என்ஜினில் இருந்து வெளியான திடீர் தீ, மள மளவென விமானத்தின் மையப்பகுதியைப் பற்றியது. தீ கொளுந்துவிட்டு எரிய புகை மண்டலத்துடன் ஓடுபாதையில் விரைந்த அந்த விமானத்தைக் கண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.
தீப்பற்றியதை அறிந்துகொண்ட விமானி உடனடியாக(12.34 மணிக்கு) விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துக்கொண்டே, வேகத்தைக் குறைத்து சில நொடிகளுக்குள் விமானத்தை நிறுத்தினார். சூழ்நிலையை உணர்ந்துகொண்டு அந்த இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்துவந்து சேர்ந்தன.
அவசரக்கால கதவுகள் திறக்கப்பட்டு அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் 12.37 மணிக்குள் ஓடுபாதை தளத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். அவசரக்கதவுகள் திறக்கப்பட்டதும், விமானம் பற்றி எரிவதால் உண்டான புகை உள்ளே புகுந்ததால் சில பயணிகள் சுவாசிக்க சிரமப்பட்டு, மூச்சுத்திணறலுக்குள்ளாகினர்.
அதற்குள், விமானத்துக்குள் ஏறிய மீட்புப் படையினர் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கி விட்டனர். அதேவேளையில், தீயணைப்பு படையினர் தீயை சில நிமிடங்களுக்குள் அணைத்து அந்த விமானம் வெடித்து சிதறும் ஆபத்தை தவிர்த்தனர்.
வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் பஸ்கள் மூலம் விமான நிலைய கட்டிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே தங்க வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 வருடங்களாக இயங்கி வரும் இந்த விமானத்திலிருந்து, புறப்படுவதற்கு முன்பாக எரிபொருள் கசிவு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என்றும், இது குறித்து விமானக் குழுவினரை ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் கடந்த செப்டம்பர் 9-ம் திகதி லாஸ் வேகாஸ் நகரில் இருந்து 172 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது நினைவுகூரத்தக்கது.
இந்த விபத்து குறித்த விளக்கமான வீடியோ பதிவு: